சீன உளவு பலூன்கள் நுழைந்தால்.. "அவ்ளோதான்" ஆக்ஷன் பிளானை ரெடி செய்த இந்தியா! என்ன திட்டம் தெரியுமா?
இந்திய வான்பரப்பில் வரும் காலங்களில் மர்ம பலூன்கள் நுழைந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த செயல் திட்டத்தை இந்தியா பாதுகாப்பு படைகள் வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி: அமெரிக்காவில் சீனாவிற்கு சொந்தமானதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட மர்ம பலூன் ஒன்று பறந்தது. இந்த பலூனை அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின. இந்தியா வான்பரப்பிலும் சீனா உளவு பார்க்கும் அபாயம் இருப்பதால் இதுபோன்ற பலூன்கள் வரும் காலங்களில் நுழைந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த செயல் திட்டத்தை இந்தியா பாதுகாப்பு படைகள் வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் கடந்த பிப்ரவரி மாத துவக்கத்தில் சந்தேகத்திற்கிடமான பலூன்கள் பறந்தன.
அமெரிக்க வான்பரப்பில் பறந்த இந்த பலூன்கள் சீனாவிற்கு சொந்தமானதாக இருக்கலாம் என்றும் உளவு பார்க்கும் நோக்கத்தில் சீனா இந்த பலூனை அனுப்பியிருக்கலாம் என்றும் அமெரிக்கா சந்தேகம் எழுப்பியது.

வான்பரப்பில் மர்ம பலூன்
ஆனால், சீனா இந்த தகவலை முற்றிலும் மறுத்ததோடு தங்கள் நாட்டில் வான்பரப்பில் கூட இப்படி ஒரு பலூன் பறந்ததாக பதில் கொடுத்து அதிர வைத்தது. அமெரிக்கா மட்டும் இன்றி அதன் அண்டை நாடான கனடாவிலும் இத்தகைய சந்தேகத்திற்கிடமான பலூன் ஒன்று பறந்தது. இது அனைத்தையும் அமெரிக்காவின் எப்.16 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தின. அமெரிக்கா மற்றும் கனடாவில் பறந்த சந்தேகத்திற்கிடமான மர்ம பலூன் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பலூன் எங்கிருந்து வந்தது
இந்தியாவிற்கு சொந்தமான அந்தமான் தீவுகளிலும் ஓராண்டிற்கு முன்பாக இதுபோன்ற பலூன் தென்பட்டதாகவும் தகவல் வெளியானது. அந்தமான் வான்பரப்பில் மூன்று முதல் நான்கு நாட்கள் இந்த பலூன்கள் தென்பட்ட போதிலும் இந்திய பாதுகாப்பு படைகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பலூன் எங்கிருந்து வந்தது.. அது உளவு பார்க்கும் தன்மை கொண்டதா? என்ற எந்த விவரமும் தெரியாமல் இருந்தது.

காற்றின் திசை காரணமாக..
மியான்மரில் இருந்து வந்ததா அல்லது சீனாவில் இருந்து வந்ததா என்ற விவரமும் அப்போது தெரியவில்லை என்று கூறும் அதிகாரிகள் நான்கு நாட்களுக்குள் அது விலகி சென்றதாகவும் குறிப்பிட்டனர். அந்த நேரத்தில் உளவு பலூன்கள் என்ற சந்தேகம் பெரிதும் எழாமல் இருந்ததால், வானிலை ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட பலூனாக இருக்கலாம் என்றும் இதுபோன்ற பலூன்கள் காற்றின் திசை காரணாக பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்தியாவுக்கு வரும் என்று கருதியிருக்கிறார்கள்.

இந்திய பாதுகாப்பு படைகள் ஆலோசனை
அப்போது பலூன் குறித்தோ அது வான்பரப்பிற்குள் நுழைந்தால் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற செயல் திட்டமும் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளிடம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், வரும் காலத்தில் இதுபோன்ற பலூன்கள் வான்பரப்பில் அத்துமீறி நுழையும் பட்சத்தில் அதை எப்படி கையாள்வது.. இதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்பது குறித்த இந்திய பாதுகாப்பு படைகள் மத்தியில் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இறுதி ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பு
இதற்கான விரிவான ஆக்ஷன் பிளானும் தயாராகி உள்ளதாகவும். அரசிடம் இறுதி ஒப்புதலுக்காக சமர்பிக்கப்பட்டு இருப்பதாகவும் பாதுகாப்புத்துறை வட்டார தகவல்கள் கூறுகின்றன. இந்த பலூன்களை பொறுத்தவரை அதன் உரிமையாளர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு நகர்த்தி கொண்டு செல்லும் திறன் படைத்தவை என்று பாதுகாப்பு படை வட்டாரங்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

ரேடார் தொழில் நுட்பம் மூலமாக
இதனால், தேவைப்படும் பட்சத்தில் எந்த மாதிரியான ஆயுதங்கள் தேவைப்படும்.. எந்த மாதிரியான தளத்தில் கையாள வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. தற்போது இருக்கும் ரேடார் தொழில் நுட்பம் மூலமாக இத்தகைய பலூன்களை கண்காணிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications