70 வயதை தாண்டிய அனைவருக்கும் மருத்துவ காப்பீடு! தனியார் இன்சூரன்ஸ் இருந்தால் கிடைக்குமா? ரூல்ஸ் என்ன
டெல்லி: ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் 70 வயதைக் கடந்த அனைவரும் பயன் பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் என்றால்.. இதன் மூலம் யாரெல்லாம் பயன் பெறுவார்கள். தனியார் இன்சூரன்ஸ் இருந்தால் இதில் பலன் கிடைக்குமா என்பது குறித்தெல்லாம் நாம் பார்க்கலாம்.
மத்திய அரசு நேற்றைய தினம் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இந்த திட்டத்தின் கீழ் 70 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கான இன்சூரன்ஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா: இந்த திட்டத்தின் மூலம் சுமார் 6 கோடி மூத்த குடிமக்கள் பயனடைவார்கள் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். இத்திட்டத்தின் கீழ் தகுதி பெறுவாருக்கு ரூ 5 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். இதன் மூலம் இந்தியாவில் சுமார் 4.5 கோடி குடும்பங்கள் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு இந்தியருக்கும் அணுகக்கூடிய, மலிவு மற்றும் உயர்தர சுகாதார சேவையை உறுதி செய்வதில் இந்த அரசு உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இதன் மூலம் பல கோடி பேர் பயனடைவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்டத்தின் கீழ் யார் பயன் பெறுவார்கள்.. இதற்கான கண்டிஷன்கள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
யார் தகுதி பெறுவார்கள்: இந்தத் திட்டத்தின் கீழ் 70 வயதைக் கடந்த அனைத்து மூத்த குடிமக்களும் பயன் பெறுவார்கள். இதில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.5 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும்.
ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மூத்த குடிமக்கள், அவர்களின் காப்பீட்டில் கூடுதலாக ரூ.5 லட்சத்தைப் பெறுவார்கள். இந்த ரூ.5 லட்ச ரூபாய் முழுக்க முழுக்க மூத்த குடிமக்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
தனியார் இன்சூரன்ஸ்: ஏற்கனவே, தனியாரில் மருத்துவக் காப்பீடு எடுத்துள்ள மூத்த குடிமக்களும் இது கிடைக்கும். அதேநேரம் மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS), முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) மற்றும் ஆயுஷ்மான் மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) போன்ற பிற பொது காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் உள்ள மூத்த குடிமக்கள் தங்களுக்கு அந்த திட்டம் வேண்டுமா அல்லது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வருகிறார்களா என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தைப் பெறத் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் தனித்தனி அடையாள அட்டை வழங்கப்படும்.
ஆயுஷ்மான் பாரத்: அரசு நிதி பங்களிப்புடன் நடக்கும் உலகிலேயே உள்ள மிகப் பெரிய இன்சூரன்ஸ் திட்டம் இந்த ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுதோறும் ₹5 லட்சம் இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது. இது இந்தியாவில் உள்ள 55 கோடி பேர் மற்றும் 12.34 கோடி குடும்பங்களுக்குக் காப்பீட்டை வழங்குகிறது.












Click it and Unblock the Notifications