விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் இந்தியர்.. யார் இந்த கோபிசந்த் தோட்டகுரா? ஆந்திராவை சேர்ந்தவராம்
டெல்லி: ப்ளூ ஆர்ஜின் விமானத்தில் விண்வெளிக்குச் சுற்றுலா சென்றதன் மூலம் விண்வெளி சுற்றுலா சென்ற முதல் இந்தியர் என்ற சிறப்பை ஆந்திராவைச் சேர்ந்த கோபிசந்த் தோட்டகுரா பெற்றுள்ளார்.. யார் இவர்.. இவரது பின்னணி என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
இப்போது டிரெண்டிங்கில் இப்போது என்றால் விண்வெளி சுற்றுலா தான்.. விண்வெளிக்குச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வதில் இப்போது பல்வேறு தனியார் நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன.

அதில் குறிப்பாக அமேசான் நிறுவனரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் நிறுவனம் இதில் தீவிரமாக முயன்று வருகிறது.
ப்ளூ ஆரிஜின்: ஏற்கனவே ப்ளூ ஆரிஜின் நிறுவனம் கடந்த 2021இல் முதல் முறையாக விண்வெளிக்குச் சென்று திரும்பியது. இருப்பினும், அதில் ஜெஃப் பேசோஸ் உள்ளிட்ட சிலர் மட்டுமே இருந்தனர். அதன் பிறகு 2022இல் ப்ளூ ஆரிஜின் நடத்திய ஆளில்லா விமானம் சோதனையில் முடிந்தது. இதற்கிடையே சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ப்ளூ ஆரிஜின் விமானம் 6 பயணிகளை வெற்றிகரமாக விண்வெளிக்குச் சுற்றுலா அழைத்துச் சென்று திரும்பியுள்ளது.
இந்தியர்: நியூ ஷெப்பர்ட் காப்ஸ்யூல் என்ற இந்த ராக்கெட் மேற்கு டெக்சாஸில் உள்ள ஒரு தனியார் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து அந்நாட்டு நேரப்படி காலை 9:36 மணிக்குப் புறப்பட்டு இருக்கிறது. இதில் சிறப்பு என்னவென்றால் உள்ளே இருந்த 6 பேரில் ஒருவர் இந்தியர் ஆகும். ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடாவைச் சேர்ந்த கேப்டன் தோட்டகுரா என்பவரும் இந்த விமானத்தில் விண்வெளிக்குச் சென்று திரும்பியுள்ளார்.
இவரைத் தவிரச் சர்வதேச முதலீட்டாளர் மேசன் ஏஞ்சல், பிரெஞ்ச் கிராஃப்ட் ப்ரூவரின் நிறுவனர் சில்வைன் சிரோன், சாப்ட்வேர் இன்ஜினியரும் தொழிலதிபருமான கென்னத் எல் ஹெஸ், ஓய்வு பெற்ற கணக்காளர் கரோல் ஷாலர், ஓய்வுபெற்ற அமெரிக்க விமானப்படை கேப்டன் எட் ஷாலர் ஆகியோரும் விண்வெளிக்குச் சுற்றுலா சென்று திரும்பியுள்ளனர்.
என்ன நடந்தது: பூமியில் இருந்து கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே ராக்கெட்டில் இருந்து காப்ஸ்யூல் தனியாகப் பிரிந்துள்ளது. பின்னர் அது பூமியின் வளிமண்டலத்தை அடைந்து, சுமார் 105.7 கிலோமீட்டர் உயரத்திற்குச் சென்றுள்ளது. அந்த உயரத்தில் அவர்கள் சில நிமிடங்கள் விண்வெளியில் புவி ஈர்ப்பு இல்லாததால் நிலையை உணர்வார்கள். அதன் பிறகு அந்த காப்சியூல் மூலமாகவே அவர்கள் பாதுகாப்பாகப் பூமிக்கு அழைத்து வரப்பட்டனர்.
யார் இவர்: கோபிசந்த் தோட்டகுரா சிறு வயதில் இருந்தே விமானங்களில் பறப்பதில் ஆர்வம் அதிகம்.. இவரது குடும்பத்திலேயே விமானிகள் இருக்கிறார்கள். இதன் காரணமாகவே அவர் தனது எட்டாவது வயதில் கேஎல்எம் விமானத்தின் காக்பிட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். பள்ளிப் படிப்பை முடித்த இவர் எம்ப்ரி-ரிடில் ஏரோநாட்டிக்கல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
தொடர்ந்து விமானத்தை இயக்குவது, புஷ் பைலட்டிங், ஏரோபாட்டிக்ஸ், சீப்ளேன் ஆபரேஷன்ஸ் மற்றும் ஹாட் ஏர் பலூனிங் எனப் பலவற்றையும் கற்றுத் தேர்ந்துள்ளார். மேலும் இவர் ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய மலையான கிளிமாஞ்சாரோ மலையையும் வெற்றிகரமாக ஏறியுள்ளார். இந்தியாவின் மருத்துவ விமானப் போக்குவரத்துத் துறையில் கோபி குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைச் செய்துள்ளார். இதற்காக இவர் ப்ரிசர்வ் லைஃப் கார்ப் நிறுவனத்தையும் தொடங்கி நடத்தி வருகிறார்.
ஏற்கனவே இந்தியர்கள் பலரும் விண்வெளிக்குச் சென்றுள்ள போதிலும், சுற்றுலாவா விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற சிறப்பை இந்த கேப்டன் தோட்டகுரா பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications