"ஆபாச" பாடல் சர்ச்சை.. மனைவி மர்ம மரணம்! திடீரென விலகிய பாஜக லோக்சபா வேட்பாளர் பவன் சிங்.. யார் இவர்
டெல்லி: பாஜக வேட்பாளர் பட்டியலில் இருந்த பவன் சிங் திடீரென லோக்சபா தேர்தலில் போட்டியில்லை என அறிவித்து பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள நிலையில், யார் அந்த பவன் சிங்.. அவரது பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. மொத்தம் 195 பேர் இந்த பட்டியலில் இடம் பெற்ற நிலையில், பிரதமர் மோடி வாரணாசியிலும் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா காந்தி நகரிலும் ராஜ்நாத் சிங் லக்னோவிலும் போட்டியிடுகின்றனர்.

இந்த லிஸ்டில் அசன்சோல் லோக்சபா தொகுதி வேட்பாளராக நடிகர் பவன் சிங் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அங்கே திரிணாமுல் எம்பி நடிகர் சத்ருகன் சின்ஹாவை எதிர்த்து பவன் சிங் களமிறங்க இருந்தார்..
விலகல்: இதற்கிடையே அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் லோக்சபா தேர்தலில் தான் போட்டியிடப் போவது இல்லை என்று பவன் சிங் அறிவித்துள்ளார். தனது தனிப்பட்ட காரணங்களுக்காக லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை என பாஜக தலைவர் ஜேபி நட்டாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வேட்பாளர் தேர்வில் நேரடியாக மோடி, அமித்ஷா வரை சென்ற நிலையில், திடீரென பவன் சிங் இப்படி அறிவித்துள்ளது அனைவருக்கும் ஷாக்.
யார் இவர்: சரி யார் இந்த பவன் சிங்.. கடந்த காலங்களில் இவர் சிக்கிய சர்ச்சைகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். பவன் சிங் போஜ்புரி மொழியில் பல பாடல்களைப் பாடியுள்ளார். மேலும், போஜ்புரியில் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அந்த ஊரில் அவருக்குப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் நிலையில், அவரது ரசிகர்கள் பவர் ஸ்டார் என்றே அவரது ரசிகர்கள் அழைப்பார்கள். இவர் போஜ்புரி திரைப்படத் துறையில் சிறந்த பாடகர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் போஜ்புரி திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார்.
இவரது பாடல்களும் சரி, இவர் நடித்த படங்களும் சரி அங்கே செம ஹிட். படங்களைத் தாண்டியும் பல இன்டிபெண்டன்ட் பாடல்களையும் இவர் பாடியிருக்கிறார். இவரது பல படைப்புகள் ஹிட்டும் அடித்துள்ளது. அதேநேரம் இவரது பாடல்கள் போஜ்புரி பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும் அங்கே கடும் எதிர்ப்புகளும் கூட இருக்கவே செய்கிறது.
சர்ச்சைகள்: அதேபோல தனிப்பட்ட வாழ்க்கையிலும் பவன் சிங் சர்ச்சைகளில் சிக்கியே இருந்தார். அவர் கடந்த 2014இல் நீலம் சிங் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் அடுத்த ஆண்டே அதாவது 2015இல் நீலம் சிங்க தற்கொலையால் உயிரிழந்தார். இதையடுத்து அவர் 2018இல் பவன் சிங் ஜோதி சிங் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இருப்பினும், இந்த திருமணமும் சில ஆண்டுகள் மட்டுமே நீட்டித்தது. 2022இல் இவர்கள் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியிருந்தனர்.
இப்படிப் புகழ் மற்றும் சர்ச்சை என இரண்டையும் சம அளவில் வைத்திருந்த பவன் சிங்கை தான் பாஜக அசன்சோல் லோக்சபா தொகுதி வேட்பாளராக அறிவித்து இருந்தது. அவரை வேட்பாளராக அறிவித்த உடனேயே மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் இதைக் கடுமையாகச் சாடியது. வங்கத்து பெண்களை இழிவுபடுத்தும் நபரை பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது வெட்கக்கேடானது எனச் சாடியது.
சாடல்: திரிணாமுல் காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி சகரிகா கோஸ் தனது எக்ஸ் பக்கத்தில், "வங்காள பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிக்கும் பாடலை பாடிய ஒருவர் நாடாளுமன்றத்தில் எம்பியாக எப்படி இருப்பார்" எனப் பதிவிட்டு அந்த பாடலையும் பகிர்ந்திருந்தார். அதேபோல திரிணாமுல் காங்கிரஸின் மஹுவா மொய்த்ராவும் பவன் சிங்கின் பழைய வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் மக்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்விக்கே பதில் அளிக்க முடியாமல், கேள்வியே புரியவில்லை எனச் சொல்வது போல உள்ளது.
அதேபோல காங்கிரஸ் கட்சியும் இதை கடுமையாகச் சாடியிருந்தது. இந்தச் சூழலில் தான் அவர் திடீரென லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். இது பாஜகவுக்குத் தர்மசங்கடத்தையே ஏற்படுத்துவதாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications