நெருப்புடன் விளையாடும் மோடி! டெல்லி போராட்டத்திற்கு யார் காரணம்?
மத்திய அரசுக்கு எதிராக டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய 5 மாநில விவசாயிகள் ஓர் அணியில் திரும்பியுள்ளனர்.
வேளாண் சட்டங்களை மோடி திரும்பப் பெறும் போது அந்த மக்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டார். 'உங்களுக்குப் புரிகின்ற மொழியில் எங்களால் சொல்ல முடியவில்லை' என்று புதிய விளக்கத்தைச் சொன்னார்.

ஆனால், இன்று அவர்களுக்குப் புரிகின்ற மொழியில் காவல்துறையை ஏவி பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி தலைநகரில் ட்ரோன்கள் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை விவசாயிகள் மீது வீசி வருவதை ஊடகங்கள் பதிவு செய்து வெளியிட்டு வருகின்றன.
சாலைகள் முழுவதும் சிமெண்ட் தடுப்புச் சுவர்களை நட்டு வைத்திருக்கிறார்கள். தரையில் ஆணிகளைப் பதித்து வைத்திருக்கிறார்கள். அதையும் மீறி நீர் வழிப்பாதைகளின் வழியே ட்ராக்டர்களின் விவசாயிகள் நகரின் உள்ளே புகுந்து வருகிறார்கள்.

கலவரப் பூமியாக மாறி உள்ளது இந்தியாவின் தலைநகரம்.
விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்தால் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்து இந்தப் போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தை மோடி அரசு கையாளும் விதம் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இது குறித்து பத்திரிகையாளர் மணியிடம் பேசினோம், அவர் இந்தப் போராட்டத்தின் பின்புலத்தை மிகத் தெளிவாக விளக்கினார்.
"கடந்த 10 ஆண்டுகளாக மோடி அரசு சந்தித்து வரும் மிகப்பெரிய பிரச்சினையாக இந்த விவசாயிகள் போராட்டம் உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக மோடி அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்கள் மிகப்பெரிய கொந்தளிப்பை உண்டாக்கியது.

கிட்டத்தட்ட ஒருவருட காலம் டெல்லி வாயிலுக்குச் செல்லும் சாலைகளில் அமர்ந்து போராட்டங்களை நடத்தினர். கடும் மழை, குளிர், வெயில் என்று எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் போராடினார்கள். அந்தப் போராட்டத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் உயிரையே இழந்தார்கள். ஆனால், மோடி அரசு எதற்கு இணங்கவில்லை.
கடைசியாகப் பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தலை மனதில் வைத்து, வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக மோடி அரசு அறிவித்தது. பிரதமர் மோடியே தொலைக்காட்சியில் தோன்றி அதை அறிவித்தார்.
அப்போது மோடி அரசு வழங்கிய வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை என்று சொல்லி, இப்போது விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா, கிழக்கு உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள வேளாண் பெருமக்கள் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர்.
அவர்கள் வைத்துள்ள கோரிக்கைகளில் மிக முக்கியமானவை என்னவென்றால், பிரதமர் நரேந்திர மோடி 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.
ஆனால், அந்த அறிவிப்பு, முறையாக நாடாளுமன்ற அவையில் வைத்துத் திரும்பப் பெறப்படவில்லை. அதை முக்கியமான கோரிக்கையாக விவசாயிகள் முன்வைத்துள்ளனர்.

ஆகவே, முறையாக அரசு திரும்பப் பெற வேண்டும். அடுத்து அவர்கள் விளைவிக்கும் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும்.
அதாவது எம்.எஸ்.சாமிநாதன் கமிட்டி வழங்கிய குறைந்த பட்ச விலை நிர்ணயம் அறிக்கையை அமல்படுத்த வேண்டும். இந்த வேளாண் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழங்கிகளைத் திரும்பத் திரும்பப்பெறவேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தார்கள்.
அதை ஏற்றுக் கொண்ட அரசு நடைமுறைப்படுத்தவில்லை. ஆகவே அதைச் செய்ய வேண்டும் என்கிறார்கள். அதற்கு மோடி அரசு என்ன சொல்கிறது என்றால் ? சட்டம் ஒழுங்கு மாநில அரசு பிரச்சினை, அதில் நாங்கள் ஒன்று செய்ய முடியாது என்று கைவிரிக்கிறது.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள அரசுகள் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப்பெறத் தயாராக உள்ளன. பாஜக ஆளுகின்ற மாநிலங்களுக்கு மோடி அரசு உத்தரவிட்டால் உடனே அதைச் செய்துவிடப் போகிறார்கள். ஆகவே, மோடி அரசு தரும் விளக்கம் நியாயமானதாக இல்லை.
உத்தரப் பிரதேசத்தில் விவசாய போராட்டத்தின் போது மந்திரி மகன் காரை ஏற்றி கொலை செய்த வழக்கில் உள்ள மந்திரியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். காரை ஏற்றியவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.
ஆனால், இதுவரை பாதிக்கப்பட்ட தரப்புக்கு நியாயம் கிடைக்கவில்லை. அதற்கு நீதி வேண்டும் என்று விவசாயிகள் சொல்கிறார்கள்.

காவல்துறையை வைத்து மத்திய துணை ராணுவப் படையை வைத்தும் போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு மோடி அரசு கடுமையான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.
விவசாயிகளை 'அன்னதாதா' என்று பெருமையாகப் பேசுகிறார். அன்னதாதா என்றால் நாட்டிற்குச் சோறும் போடும் விவசாயிகளைக் குறிக்கும். அப்படிச் சொல்லிவிட்டு, அறவழியில் போராடும் விவசாயிகள் மீது புகைக் குண்டுகளைப் போடுகிறார். சாலைகளில் ஆணிகளைப் புகைக்கிறார். காவல்துறையை ஏசி, போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்துகிறார். இதுதான் அன்னதாதா மீது மோடி வைத்துள்ள அக்கறையா?
விவசாயிகளைக் கலந்தாலோசிக்காமலே மோடி அரசு கொண்டுவந்த சட்டங்கள் அவை. விவசாயிகள் வேண்டாம் என்றார்கள். எதிர்க்கட்சிகள் வேண்டாம் என்றார்கள். எதையும் கேட்காமல் சட்டத்தைக் கொண்டுவந்தது பாஜக அரசு. ஒரு சட்டம் மக்களுக்கு எதிராக உள்ளது என்றால், அதை அரசு அந்த மக்களோடு கூடிப் பேசி ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டுமா? வேண்டாமா?

பொதுவாக மசோதாக்களை நாடாளுமன்றத்தில் வைத்து விவாதிக்க வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள குறைகள் தெரியும். ஆனால், அதை மோடி விரும்பியதே இல்லை. எந்தச் சட்டத்தையும் இயற்றுவதற்கு முன்னால் ஆலோசிப்பதற்கும் அறிவுப்பூர்வமாக விவாதிப்பதற்கும் மோடி விரும்புவதில்லை.
அவர் எப்போது பேச்சுவார்த்தைக்கு வரவே மறுப்பார். மணிப்பூர் கலவரம் என்ன ஆனது? பிரதமரைப் பேச வைப்பதற்காக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தன. அதற்குப் பதிலளிக்கும் போது மோடி, மணிப்பூர் என்ற வார்த்தையையே சொல்லாமல் மணிக்கணக்காகப் பேசினார்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த பிறகு மணிப்பூரைப் பற்றிப் பேசினார்.

இன்று விவசாயிகளிடம் ஒரு பக்கம் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். மற்றொரு பக்கம் போராட்டத்தை ஒடுக்க காவல்துறையை ஏவுகிறார்கள். ஆட்சியாளர்கள் நெருப்புடன் விளையாடுகிறார்கள். சொந்த நாட்டு மக்கள் மீது இப்படியா ராணுவத்தையும் காவல்துறையும் ஏவி விடுவது?
அந்த ராணுவத்திலும் காவல்துறையிலும் இருப்பவர்கள் யார்? பஞ்சாப் மாநிலத்தில் கான்ஸ்டபுள்ஸ் பணியில் இருப்பவர்களில் 60% பேர் குக்கிராமங்களிலிருந்து வந்தவர்கள். அவர்களின் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா விவசாய போராட்டத்தில் இருக்கிறார்கள்.
அவர்களை எதிர்த்து காவல்துறை எவ்வளவு நாளைக்குப் போரிடம்? ஒருநாள் அந்தக் காவலர்கள் விவசாயிகள் பக்கம் வந்து விடுவார்கள். ஆகவேதான் சொல்கிறேன். மத்திய அரசு நெருப்புடன் விளையாடிக் கொண்டிருக்கிறது" என்கிறார்



-
ஜனநாயகன் படத்தை இன்று பார்வையிடும் மறு தணிக்கை குழு.. விஜய்க்கு பெரிய ட்விஸ்ட் இருக்கு -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள்












Click it and Unblock the Notifications