யார் இந்த சுதர்சன் ரெட்டி! சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கடும் போட்டி தரும் "இந்தியா" கூட்டணி வேட்பாளர்
டெல்லி: இன்று நமது நாட்டில் துணை ஜனாதிபதியைத் தேர்வு செய்யத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் என்டிஏ கூட்டணியின் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு எதிராக "இந்தியா" கூட்டணி சார்பில் பொது வேட்பாளராக பி. சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில் பி. சுதர்சன் ரெட்டி வெல்ல வாய்ப்பு குறைவு என்றாலும் கூட அவர் கடும் போட்டியைக் கொடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. யார் இந்த பி. சுதர்சன் ரெட்டி என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ஜெகதீப் தன்கர் உடல்நிலை காரணமாகக் கடந்த ஜூலை மாதம் மழைக்கால கூட்டத்தொடர் நடக்கும் போதே தனது துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதையடுத்து அந்த பதவி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. துணை ஜனாதிபதியைத் தேர்வு செய்யத் தேர்தல் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்
குடியரசு துணைத் தலைவர் பதவி என்பது வெறும் அலங்கார பதவி இல்லை. ராஜ்யசபாவையும் துணை ஜனாதிபதி தான் வழிநடத்துவார். இதன் காரணமாகவே இந்தப் பதவி மிக முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது. ஆளும் என்டிஏ கூட்டணி சார்பில் சி.பி ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். ஆளும் தரப்புக்குத் தேவையான எம்பிக்கள் ஆதரவு இருப்பதால் சி.பி ராதாகிருஷ்ணன் வெல்லவே வாய்ப்புகள் அதிகம். ஆனாலும், எதிர்க்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டி இதில் கடும் போட்டியைக் கொடுக்கிறார்.
இந்தியா கூட்டணி
"இந்தியா" எதிர்க்கட்சிகள் சார்பில் பல்வேறு பெயர்கள் ஆலோசிக்கப்பட்ட போதிலும், கடைசியில் மாஜி சுப்ரீம் கோர்ட் நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அரசியல் சார்பில்லாத நபராக சுதர்சன் ரெட்டி இருக்கிறார். யார் இந்த சுதர்சன் ரெட்டி.. இவரது பின்னணி குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
யார் இந்த சுதர்சன் ரெட்டி
சுதர்சன் ரெட்டி நமது அண்டை மாநிலமான ஆந்திராவைச் சேர்ந்தவர். அவர் 1946 ஜூலை 8ம் தேதி தெலுங்கானாவில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் பிறந்தார். ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்த இவர், 1971ல் ஆந்திரப் பிரதேச பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். ஆந்திரப் பிரதேச ஐகோர்ட்டில் ரிட் மற்றும் சிவில் வழக்குகளைக் கையாண்ட இவர், மத்திய அரசு கூடுதல் அரசு வழக்கறிஞராகவும் பணிபுரிந்திருக்கிறார். அதன் பிறகு உஸ்மானியா பல்கலைக்கழக சட்ட ஆலோசகராகவும், அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.
சட்ட பின்னணி
சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு 1993ல ஆந்திரப் பிரதேச ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அங்கு 10 ஆண்டுகள் நீதிபதியாக இருந்த அவர், பல முக்கிய வழக்குகளை விசாரித்த தீர்ப்பளித்தார். சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, 2005ல் அவர் கவுஹாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.
அதன் பிறகு 2007இல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அங்கு 4 ஆண்டுகள் பணியாற்றிய இவர், 2011இல் ஓய்வு பெற்றார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது அவர், பல முக்கிய தீர்ப்புகளை அளித்துள்ளார். அவரது சில தீர்ப்புகள் நாடு முழுக்க கூட பேசுபொருள் ஆகியுள்ளன. என்டிஏ கூட்டணிக்கு போதுமான ஆதரவு இருப்பதால் சிபி ராதாகிருஷ்ணன் வெல்லவே வாய்ப்புகள் அதிகம். இருப்பினும், பொது வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளதால் வாக்கு வித்தியாசம் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications