"தவறான தகவல்!" கொரோனாவால் இந்தியாவில் 47 லட்சம் பேர் பலி? WHO தரவுகளை மறுக்கும் மத்திய அரசு
டெல்லி: இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகள் குறித்த உலக சுகாதார அமைப்பின் கணக்கீடுகள் குறித்து மத்திய அரசு சில கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா, அதன் பின்னர் உலக நாடுகளை ஒரு வழி செய்துவிட்டது. வளர்ந்த நாடுகள் தொடங்கி பின்தங்கிய நாடுகள் வரை அனைத்தும் மோசமாகப் பாதித்தன.
ஆல்பா, டெல்டா, ஓமிக்ரான் என்று கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருந்ததால், கொரோனா வைரஸை முழுமையாக ஒழிக்க முடியவில்லை.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுதும் இதுவரை 6,271,889 பேர் பலி.. 515,792,334 பேர் பாதிப்பு
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல நாடுகளும் தங்கள் மக்களை இழந்துள்ளன. கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் ஒருபுறம் என்றால், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் உலக நாடுகளை அச்சுறுத்தியது. இப்போது வைரஸ் பாதிப்பு சற்றே குறைந்துள்ள நிலையில், உலகின் பல நாடுகளும் கொரோனா உயிரிழப்புகளை மீண்டும் மாற்றி அமைத்து வருகிறது. இதனிடையே இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகள் குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளது.
47 லட்சம்
நேற்றைய தினம் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகள் குறித்த தகவல்களை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டிருந்தது. அதில் கொரோனா காரணமாக உலகெங்கும் சுமார் 1.49 கோடி பேர் உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்பட்டது. அதேபோல இந்தியாவில் மட்டும் சுமார் 47 லட்சம் பேர் கொரோனா காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. நாட்டில் அதிகாரப்பூர்வ கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 5.24 லட்சமாக உள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பின் கணக்கு அதை விடப் பல மடங்கு அதிகமாக உள்ளது.
மத்திய அரசு
இதனிடையே உலக சுகாதார அமைப்பின் கொரோனா உயிரிழப்பு குறித்த தகவல்கள் மீது மத்திய அரசின் சுகாதாரத் துறையினர் சந்தேகத்தை எழுப்பி உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக நாட்டில் 47 லட்சம் பேர் உயிரிழந்து இருக்கலாம் என்ற தகவல்களின் ஆதாரங்களில் சந்தேகம் இருப்பதாகச் சுகாதாரத் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேகம்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இதற்கான மூல தரவு உலக சுகாதார அமைப்பிற்கு முன்கூட்டியே வழங்கப்பட்டது. நாட்டில் இருக்கும் உண்மை நிலையைக் கருத்தில் கொள்ளாமல் தரவுகளை வைத்து கணக்கிட்டு உள்ளனர், உலக சுகாதார அமைப்பின் இந்த செயல் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது" என்றார், உலக சுகாதார அமைப்பு கணக்கியல் ரீதியாக கொரோனா உயிரிழப்புகளைக் கணக்கிட்டு உள்ளதாக இந்தியா சுகாதாரத் துறையினர் சாடி உள்ளனர்.
விகே பால்
இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் குறித்து கணிதத்தைப் பயன்படுத்தி இப்படிக் கணக்கிட்டு உள்ளது கேள்விக்குரிய வகையில் உள்ளதாக மத்திய அரசும் சாடி உள்ளது. உலக சுகாதார அமைப்பின் இந்த உயிரிழப்புகளைக் கணக்கிடும் முறைக்கு அதிருப்தி தெரிவித்துள்ள நிதி ஆயோக் தலைவர் விகே பால், ஒரே முறையைப் பயன்படுத்தி உலகின் அனைத்து நாடுகளிலும் கொரோனா உயிரிழப்புகளைக் கணக்கிட முடியாது என்று விமர்சித்துள்ளார்,
அதிருப்தி
இது குறித்து நிதி ஆயோக் தலைவர் விகே பால் கூறுகையில், "கொரோனா உயிரிழப்புகளைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் இந்த முறை சரியில்லை. அதேபோல ஒவ்வொரு மாநிலத்தில் இருந்து வரும் தரவுகளை வைத்து இந்தியா போன்ற தேசத்திற்கு ஒட்டுமொத்தமாக கொரோனா உயிரிழப்புகளைக் கணக்கிடுவது என்பது சாத்தியமில்லை. உலக சுகாதார அமைப்பின் இந்த செயல் ஏமாற்றத்தை அளிக்கிறது" என்று கூறி உள்ளார்,