"இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை.. பிரதமரே நடவடிக்கை எடுங்கள்..!" 180 இந்து அமைப்புகள் பரபர கடிதம்
டெல்லி: வெளிநாடுகளில் இருக்கும் இந்துக்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில், முக்கிய சம்பவம் ஒன்று நடந்து உள்ளது.
இந்தியாவில் இருந்து இப்போது பலரும் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ஐடி உள்ளிட்ட துறைகளில் இந்தியர்கள் சிறந்து விளங்குவதால் வேலை எளிதாகக் கிடைக்கிறது.
இருப்பினும், இதன் காரணமாக அங்குள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இதனால் பாகுபாடு காட்டும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது.

பாகுபாடு
சமீபத்தில் கூட அமெரிக்காவில் இந்தியப் பெண்களை நான்கு பேரை மிக மோசமான வார்த்தைகளால் மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர் சாடியிருந்தார். அதைத் தொடர்ந்து இதேபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்தது. இந்தியர்கள் அதிகம் இருக்கும் மற்றொரு நாடான பிரிட்டனிலும் இதேபோல மோடமான தாக்குதல் சம்பவம் நடந்தது. இந்தியா பாகிஸ்தான் ஆசியக் கோப்பை போட்டிக்குப் பின்னர் இந்தச் சம்பவம் நடந்து உள்ளது.

மோதல்
அப்போது இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் பிரிட்டனில் பல இடங்களில் தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டது. குறிப்பாக அங்கு உள்ள இந்து கோயில் ஒன்று தாக்கப்பட்டு, அங்கு ஏற்றப்பட்ட காவி கொடியும் இறக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அங்கு வாழும் இந்துக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற தாக்குதல் தொடருமோ என்றும் அச்சம் தெரிவித்து உள்ளனர்

ஆபத்து
இந்தச் சூழலில் சுமார் 180 இந்து அமைப்புகள் மற்றும் கோவில்கள் ஒன்றாக இணைந்து பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸுக்கு கடிதம் எழுதியுள்ளனர். பிரிட்டன் நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வன்முறை குறித்து கவலை தெரிவித்து உள்ள அவர்கள் இந்த விவகாரத்தில் பிரிட்டன் அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்றும் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளனர். இந்து சமூகம் நாட்டில் குறிவைக்கப்பட்டு உள்ளது போல உணர்வதாகவும் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளனர்.

விசாரணை
அங்குள்ள 100க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகளும் இந்து கோயில்களும் இணைந்து இந்த கடிதத்தை எழுதி உள்ளனர். இந்துக்களுக்கு எதிரான குற்றங்களை போலீசார் விசாரிப்பதை உறுதி செய்யவும், பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு தனது கடிதத்தில் கூறி உள்ளன. மேலும், இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

தீவிரவாதம்
இந்து விரோத சம்பவங்கள் மற்றும் அதன் காரணங்கள் குறித்து ஒரு சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளனர். பிரிட்டனின் உள்நாட்டுத் தீவிரவாதத்தின் அச்சுறுத்தலையும், பிரிட்டனின் சில பகுதிகள் இதன் மையப் பகுதியாக மாறிவிட்டதை உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

பாதுகாப்பு இல்லை
இதனால் பிரிட்டனில் வாழும் இந்துக்கள் ஒவ்வொரு நாளும் அச்சத்துடன் வாழ வேண்டி உள்ளதாகவும் கூறி உள்ளனர். மேலும், அங்கு வாழும் இந்துக்களைத் தாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்துக்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கடிதத்தில் கூறி உள்ளனர்.












Click it and Unblock the Notifications