பக்கா "பிளான்!" எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு விசிட்.. அடுத்த அரசியல் அதிரடிக்கு தயாராகும் அமித் ஷா!
டெல்லி: 2024 மக்களவை தேர்தலுக்கு முன் பல்வேறு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பக்கா பிளான் உடன் அமித் ஷா களம் இறங்கி உள்ளார்.
அடுத்து நாட்டில் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் பாஜக ஏற்கனவே தயாராகி வருகிறது.
மக்களவை தேர்தலுக்கு முன்பு, பல்வேறு மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிலும் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் பாஜக சத்தமின்றி நடவடிக்கையைத் தொடங்கி உள்ளது.

அமித் ஷா
இதற்காக விரைவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சிகள் ஆளும் ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களில் அடுத்தடுத்து முக்கிய கட்சி நிகழ்வுகளில் நேரடியாகப் பங்கேற்க உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸுக்கு கடும் சவாலைக் கொடுக்க முடியும் என அவர் நம்புகிறார்.

முக்கிய கூட்டங்கள்
பீகாரில் தான் பாஜகவுக்குப் பெரிய சவால் காத்திருக்கிறது. பாஜக உடனான கூட்டணியை நிதிஷ்குமார் முறித்துக் கொண்ட நிலையில், கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் பாஜக இறங்கி உள்ளது. வரும் செப். 17,18 தேதிகளில் பீகார் மாநிலத்தில் உள் துறை அமைச்சகத்தின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர் கட்சி ரீதியாகவும் முக்கிய ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.

அமித் ஷா
அரசியல் சாணக்கியராக அறியப்படும் அமிஷ் ஷாவுக்கு பீகார் தான் கடும் சவாலாக இருக்கப் போகிறது. ஏனென்றால் பாஜகவின் கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்ட போதிலும், இன்னும் கூட நிதிஷ்குமார் முதல்வர் பதவியில் தொடர்கிறது. ஆட்சியை எப்படியாவது கைப்பற்றும் கட்சி என்ற பெயர் பெற்றுள்ள பாஜகவுக்கு இந்த நிகழ்வு சற்று சங்கடத்தைத் தான் ஏற்படுத்துவதாக உள்ளது.

பீகார்
அதேநேரம் நிதிஷ் குமாரை ஒரு சந்தர்ப்பவாதி என பாஜக தொடர்ச்சியாக விமர்சித்தே வருகிறது. தேஜஸ்வி யாதவ் மற்றும் காங்கிரஸ் உடன் நிதிஷ் கூட்டணி அமைந்துள்ள நிலையில், பாஜக சற்று தனது பிளான்களை சற்று மாற்ற வேண்டி உள்ளது. இதுநாள் வரை பீகாரில் பாஜகவுக்குக் கிடைத்த வாக்குகள் பெரும்பாலும் மோடிக்காக கிடைத்ததாகவே இருந்தது. இப்போது பலமான கூட்டணியை எதிர்கொள்ள வேண்டி இருப்பதால் மாநிலத்தில் புதிய தலைவரை முன்னிறுத்த வேண்டிய நிலைக்கு பாஜக தள்ளப்பட்டு உள்ளது..

ராஜஸ்தான்
பீகாரில் சட்டசபைத் தேர்தல் 2025இல் நடைபெற உள்ளது. இருப்பினும், அதற்கு முன்பு மக்களவை தேர்தல் வரும் என்பதால் பாஜக மக்களவை தேர்தலில் அதிக இடங்களைப் பெற வேண்டும் என்பதே முதல் இலக்காக இருக்கும். இதற்கு முன், அதாவது 2023 இறுதியில் ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தல் வருகிறது. ராஜஸ்தானில் ஓபிசி சாதிகளின் வாக்குகளை ஒருங்கிணைப்பதே பாஜகவின் பிரத்தியேக திட்டமாக உள்ளது.

வசுந்தரா ராஜே
இதுவரை, ராஜஸ்தானில் பாஜகவின் முகமாக வசுந்தரா ராஜே தான் இருக்கிறார். சாதிகளைக் கடந்து, அனைவரையும் கவரும் தலைவராக வசுந்தரா ராஜே இருப்பார் என பாஜக கருதுகிறது. அங்குள்ள கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்குச் சமீப காலமாக அங்கு நடக்கும் வகுப்புவாத மற்றும் சாதிய வன்முறைகளால் அழுத்தத்தையே ஏற்படுத்துகிறது.

பிளான் பி
அதேநேரம் காங்கிரஸ் கட்சியும் பிளான் பி-ஐ கையில் வைத்துக் கொண்டு இருக்கிறது. கெலாட்டை காங்கிரஸ் தேசிய தலைவராக்கிவிட்டு, சச்சின் பைலட் தலைமையில் ராஜஸ்தான் தேர்தலைக் காங்கிரஸ் எதிர்கொள்ளும். இதற்கு கவுன்டர் பிரசாரத்தை பாஜக முன்னெடுப்பது குறித்து அமித் ஷா ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அமித் ஷாவின் இந்த பயணம் அக்கட்சிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.












Click it and Unblock the Notifications