முதலில் நாயுடு, அடுத்து ஸ்டாலின்! அதிக குழந்தைகளை பெற்றெடுக்க சொல்ல என்ன காரணம்! இது சர்வதேச பிரச்னை
டெல்லி: மக்கள் தொகை அதிகரிக்க நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியிருந்தார். முதலில் சந்திரபாபு நாயுடு இந்த கருத்துகளைக் கூறிய நிலையில், தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினும் கிட்டத்தட்ட இதே கருத்தைக் கூறியிருக்கிறார். இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு மக்கள்தொகை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், இதற்கு சில திட்டங்களை கொண்டு வரப் போவதாகவும் குறிப்பிட்டார்.

அதேபோல தமிழக முதல்வர் ஸ்டாலினும் மக்கள் அதிகம் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது குறித்துப் பேசியிருந்தார். இரு தலைவர்களும் இது குறித்துப் பேச என்ன காரணம் என்பதை நாம் பார்க்கலாம்.
பிரச்சினை: இரு தலைவர்களும் தென்னிந்திய மாநில மக்கள் குறித்துப் பேசினாலும், விரைவில் அவர்கள் குறிப்பிட்ட பிரச்சினை நாடு முழுக்க ஏற்படும் என்றே வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். அதாவது நமது நாட்டில் மக்கள் தொகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த 2000ஆம் ஆண்டில், தேசிய மக்கள் தொகைக் கொள்கை கொண்டு வரப்பட்டது. கருத்தடை, சுகாதார உள்கட்டமைப்பு என மக்கள் தொகை அதிகரிப்பைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 2045ம் ஆண்டிக்குள் நிலையான மக்கள்தொகை அடைவதே இதன் நோக்கமாகும்.
அதாவது ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேர் புதிதாகப் பிறக்கிறார்கள். பல லட்சம் பேர் இறக்கிறார்கள். பிறப்பு இறப்பைத் தாண்டி மக்கள் தொகை தற்போதுள்ள நிலையில் தொடர வேண்டும் என்றால் TFT (கருவுறுதல் விகிதம்) 2.1ஆக இருக்க வேண்டும். ஆனால் கடந்த 2019- 2021 காலகட்டத்தில் எடுக்கப்பட்ட சர்வேயில் இது ஏற்கனவே 2.1க்கு கீழ் போனது தெரிய வந்துள்ளது. அதாவது நாட்டின் மக்கள்தொகை சரியான விகிதத்தில் வளரவில்லை. இதனால் காலப்போக்கில் நமது நாட்டில் மக்கள் தொகையில் சரிவு ஏற்படும்.
என்ன சிக்கல்: இந்தியாவில் உள்ள பல ஜோடிகள் ஒரு குழந்தையை மட்டும் பெற்றுக் கொள்கிறார்கள் அல்லது குழந்தைகளையே பெற்றுக் கொள்வதில்லை என்பதையே இது காட்டுகிறது. இதை நிலை தொடர்ந்தால் இது பொருளாதார மற்றும் சமூக ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தும்.
நமது நாட்டிற்கும் சரி, சீனாவுக்கும் சரி மக்கள்தொகை தான் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட். அதிகளவில் மக்கள் இருப்பதாலேயே பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகள் குறைந்த விலையில் நமக்கு கிடக்கிறது. மக்கள் தொகை சரியும் போது விலைவாசி உயரும் ஆபத்து இருக்கிறது.
உலக நாடுகள்: மேலும், இப்போது நமது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 40% பேர் 25 வயதிற்குப்பட்டவர்கள். மேலும், நாட்டின் சராசரி வயது 28 ஆக உள்ளது. இது அமெரிக்காவில் 38ஆகவும் சீனாவில் 39ஆகவும் உள்ளது. இளைஞர்கள் அதிகம் இருந்தால் தான் உற்பத்தித்திறன் அதிகரிக்கும். வயதானவர்கள் அதிகம் இருந்தால் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவு இருக்காது. தென்கொரியா, ஜப்பான் நாடுகளில் இப்போது இந்த பிரச்சினை தான் பெரிதாக வெடித்துள்ளது.
மக்கள் தொகை குறையத் தொடங்கியுள்ளதால் வரும் காலத்தில் இந்தியாவிலும் இதே நிலை ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்தியாவில் இளைஞர்கள் மக்கள்தொகை வரும் ஆண்டுகளில் வெகுவாகக் குறைந்து, தேவையைப் பூர்த்தி செய்யத் தவறிவிடும் என்று எச்சரிக்கப்படுகிறது.
வட இந்தியா: நமது நாட்டிற்குள்ளே பார்த்தால் வட இந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் ஒப்பீட்டளவில் அதிகமாகவே உள்ளது. அதேநேரம் தென்னிந்தியாவில் இது குறைவாக உள்ளது. இதனால் தென்னிந்தியாவில் முன்கூட்டி இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து இங்குப் பொருளாதாரம் பாதிக்கும். அதேநேரம் வட இந்தியாவில் இளைஞர்கள் அதிகம் இருப்பதால் பொருளாதாரம் வேகமாக வளரும். குழந்தை பிறப்பு குறித்து இப்போது அரசியல்வாதிகள் பேசத் தொடங்க இதுவும் முக்கிய காரணமாகும்.
மேலும், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யும் போது வட இந்தியாவுக்கு அதிக எம்பி சீட் கிடைக்கும். இதனால் தென்னிந்திய மாநிலங்களின் அதிகாரம் குறையும் நிலை ஏற்படும். இதுவும் மற்றொரு முக்கிய காரணமாகும்.












Click it and Unblock the Notifications