ப.சிதம்பரம் கண்டது ரூ 1 கோடிதானே.. ஆனா 749 கோடியை கைமாற்றிய தயாநிதியை கைது செய்யாதது ஏன்.. நீதிபதி
Recommended Video
டெல்லி: முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வெறும் ஒரு கோடி அளவிற்கு மட்டுமே பலன் அடைந்ததாக கூறும் நீங்கள் 749 கோடி லஞ்ச பணத்தை கைமாற்றிய தயாநிதி மாறனை கைது செய்யாதது ஏன் என டெல்லி நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2006-ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்த போது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் ரூ 3,500 கோடி முதலீடு செய்தது.
இந்த முதலீடு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதற்கு கார்த்தி சிதம்பரமும் உதவி செய்தார் என்றும் அதற்கு பிரதிபலனாக அவரது நிறுவனங்களுக்கு பணம் கைமாறியதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் மீது சிபிஐயும் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

மாறன் சகோதரர்
முன்னதாக, அதாவது சிதம்பரம், கார்த்தி உள்ளிட்டோர் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்படுவதற்கு முன்னர் ஏர்செல் நிறுவன பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சிவசங்கரனை முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் அவரது சகோதரர் கலாநிதிமாறனும் வற்புறுத்தியதாக அவர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

குற்றப்பத்திரிகை
இந்த வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி விசாரித்தார். அப்போது சிபிஐ குற்றச்சாட்டுகளில் எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி தயாநிதி, கலாநிதி உள்ளிட்டோர் விடுவித்தார். இதன் பின்னர்தான் சிபிஐ, அமலாக்கத் துறை சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் பெயர்களை துணை குற்றப்பத்திரிகையில் சேர்த்தது.

ஷைனி
இந்த நிலையில் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சிபிஐ காவலில் இருந்த ப.சிதம்பரம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி விசாரித்தார்.

வெறும் 1.13 கோடி
அப்போது ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிதம்பரத்திற்கும் கார்த்திக்கும் முன்ஜாமீன் வழங்கினார். பின்னர் நீதிபதி கூறுகையில் ப.சிதம்பரத்துக்கு எதிராக விசாரணை அமைப்புகளின் குற்றச்சாட்டுகள் மிகப் பெரியவை அல்ல. இந்த வழக்கில் ப.சிதம்பரம் வெறும் 1.13 கோடி பணத்தை பெற்று பலனடைந்தார் என்பதுதான் குற்றச்சாட்டு.

சட்டத்துக்கு புறம்பானது
ஆனால் இந்த தொகை இதே வழக்கில் தயாநிதி மாறன் மூலம் கைமாறிய ரூ 749 கோடியை விட சிறியத் தொகைதான். அப்படியிருக்கும் போது தயாநிதி மாறன் உள்ளிட்டோரை மட்டும் விசாரணை அமைப்புகள் கைது செய்யாதது ஏன். ஒரே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரிடம் விசாரணை அமைப்புகள் பாரபட்சம் பார்க்கக் கூடாது. அவ்வாறு பார்ப்பது சட்டத்துக்கு புறம்பானது என்றார் நீதிபதி ஷைனி.












Click it and Unblock the Notifications