தாம்பரத்தில் ஒரே முகவரியில் 360 வாக்காளர்கள்.. திமுக முறைகேடு செய்யுதாம்.. ராஜ்யசபாவில் தம்பிதுரை பேச்சு
டெல்லி: வாக்காளர் பட்டியலில் திமுக முறைகேடு செய்துள்ளதால் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையை அதிமுக ஆதரிக்கிறது. தாம்பரம் தொகுதியில் ஒரே முகவரியில் 114 வாக்காளர்களும், இன்னொரு இடத்தில் ஒரே முகவரியில்360 வாக்காளர்களும் உள்ளன'' என்று அதிமுக எம்பி தம்பிதுரை நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் இன்று பேசினார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் ‛சார்' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கை தொடர்பான விவாதம் நடந்து வருகிறது. லோக்சபா, ராஜ்யசபா என்று இரு சபைகளிலும் இதுதொடர்பான விவாதம் நடந்து வருகிறது.

லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சியினர் ‛சார்' நடவடிக்கைக்கு எதிராக பேசினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக அதன் கூட்டணி கட்சியினர் ‛சார்' நடவடிக்கைக்கு ஆதரவாக பேசினர்.
இந்நிலையில் தான் இன்று ராஜ்யசபாவில் அதிமுக எம்பி தம்பிதுரை பேசினார். அப்போது அதிமுக ஏன் ‛சார்' நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கிறது என்று விளக்கினார். அதோடு திமுக மீது பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதுதொடர்பாக தம்பிதுரை எம்பி கூறியதாவது: ‛‛ நான் என் கட்சி சார்பிலும், எனது தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சார்பிலும் பொருத்தமான விவாதத்தில் பங்கேற்கிறேன். அதுதான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர நிறுத்தம் தொடர்பான விவாதம்.
நான் வாஜ்பாய் அரசில் சட்டத்துறை அமைச்சராக இருந்தேன். கிரண் ரிஜூஜூ சட்டத்துறை அமைச்சராக இருந்தவர். அர்ஜூன் ராம் மேக்வால் சட்டத்துறை அமைச்சராக இருக்கிறார். சட்ட ஆணையம் சட்ட அமைச்சகத்தின் கட்டப்பாட்டின் கீழ் வருகிறது. நான் தெளிவாக கூறுகிறேன். நான் ஒருபோதும் இந்த விவகாரங்களில் தலையிட்டது இல்லை.
ஏனென்றால் சற்று முன் திமுக உறுப்பினர் ஒரு சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதுபற்றி நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். திமுகவும் மத்திய அரசில் இடம்பெற்றுள்ளது. திமுக கட்சி தங்களுக்கு சாதகமாக உள்துறை அமைச்சகத்தையோ அல்லது தேர்தல் ஆணையத்தையோ பயன்படுத்தியதா? என்பதை நான் அறிய விரும்புகிறேன். ஏனென்றால் இது மிகவும் முக்கியமானது.
நான் ஒன்றை உறுதியாக சொல்ல விரும்புகிறேன். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படுகிறது. குறிப்பாக வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கை ரொம்ப முக்கியம். தமிழ்நாட்டில் தாம்பரம் சட்டசபை தொகுதியில் ஒரே முகவரியில் 114 ஓட்டுகள் உள்ளன. அதே தொகுதியில் இன்னொரு முகவரியில் 360 வாக்காளர்கள்பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இப்படியான நிலை உள்ளது. திமுக அரசு இதனை தவறாக பயன்படுத்துகிறது. இதனால் அதிமுக வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறது. இதனை சரிசெய்ய வேண்டிய அவசியம் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. தேர்தல் ஆணையத்தின் பங்கு என்ன? தேர்தல் ஆணையம் தான் வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும். அதுதான் அதன் கடமை. இதுதான் ஜனநாயகத்துக்கு உதவும்'' என்றார்.












Click it and Unblock the Notifications