ரபேல் டீலிங்.. லோக்சபாவில் அனல் பறந்த ராகுல் காந்தி பேச்சு.. மோடிக்கு முன்வைத்த 4 கேள்விகள்
டெல்லி: ரபேல் போர் விமான கொள்முதல் விலையை மத்திய அரசு மாற்றியமைத்தது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
லோக்சபாவில் இன்று ராகுல் காந்தி ரபேல் விவகாரம் குறித்து மீண்டும் பேசினார். அப்போது அவர் ரபேல் தொடர்பாக, 4 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று அரசை பார்த்து கேள்வி எழுப்பினார். அதுகுறித்து ராகுல் காந்தி, கூறியதாவது:
நாடகத்தனமாக நேற்று நடந்த ஒரு நேர்காணலில், பிரதமர் நரேந்திர மோடி எதற்காக ரபேல் போர் விமான கொள்முதல் தொடர்பான அடிப்படைக் கேள்விகளுக்கு கூட பதில் அளிக்கவில்லை என்று மக்களுக்கு கேள்வி எழுந்துள்ளது. ரபேல் விவகாரத்திற்காக, பிரதமரை நோக்கித்தான் மக்கள் கை காட்டுகிறார்கள்.

கேள்வி 1: 126 போர் விமானங்களுக்கு பதிலாக 36 போர் விமானங்களை வாங்குவதற்கு ஏன் முடிவு செய்யப்பட்டது? இந்திய விமானப்படை எங்களுக்கு 36 விமானங்கள் மட்டும் போதும் என்று தெரிவித்ததா? எங்களுக்கு உடனடியாக விமானம் தேவை என்பதால் 36 விமானங்கள் மட்டும் போதும் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வளவு அவசரம் என்றால், இதுவரை இந்திய மண்ணில் ஒரு ரபேல் விமானம் கூட வந்து சேரவில்லையே ஏன்?
முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் அளித்த பேட்டியில், விமான ஒப்பந்தத்தை மாற்றி அமைத்துள்ளது குறித்து எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். பாதுகாப்பு தளவாட கொள்முதலுக்கான அமைச்சரவை குழு தங்களுக்கும் இது தொடர்பாக எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளது. ஆனால் பிரதமர் இது குறித்து பதிலளிக்கவில்லை.
இந்திய பிரதமர்தான் 126 விமானங்களுக்கு பதிலாக 36 விமானங்களை வாங்கும் முடிவை எடுத்துள்ளார். விமானப்படையை கலந்தாலோசிக்காமல் அவர்களின் தேவையை கருத்தில் கொள்ளாமல் பிரதமரே தனிநபராக இந்த முடிவை எடுத்தார். இது ஏன் என்பதை தெரிவிக்க வேண்டும்.

கேள்வி 2: ரபேல் விமானங்களை, 526 கோடி ரூபாய் என்ற விலையில் வாங்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் முடிவு செய்தது. பிரதமர் மோடி பிரான்ஸ் நாடு சென்றபோது இந்த ஒப்பந்த மதிப்பு 1,600 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்திய பிரதமர்தான் புதிய விலையில் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்று கூறினார் என்று பிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.
கேள்வி 3: விமான உபகரணங்கள் தயாரிப்பு ஒப்பந்தம், ஹெச்ஏஎல் அமைப்புக்கு பதிலாக அம்பானி நிறுவனத்திற்கு, வழங்கப்பட்டுள்ளது. 70 வருடங்களாக விமான தயாரிப்பு நிறுவனத்தில் ஈடுபட்டு வருகிறது ஹெச்ஏஎல். இதற்கு முன்பு போர்க்காலங்களில் ஹெச்ஏஎல் தயாரித்த விமானங்களை பயன்படுத்தி நாம் வெற்றி பெற்றுள்ளோம். மிகப்பெரிய வரலாற்றைக் கொண்டது அந்த அமைப்பு. இந்தியாவில் சிறப்பான தொழில்நுட்பம் கொண்ட விமான அமைப்பு ஹெச்ஏஎல். ஆனால் 10 நாட்களுக்கு முன்பாக ஒரு நிறுவனத்தை தொடங்கி, அதற்கு இந்த ஒப்பந்தத்தை வாங்கியுள்ளார் அனில் அம்பானி. பிரான்சின், டஸ்ஸால்ட் நிறுவனம் வழங்கிய பணத்தைக் கொண்டுதான் அனில் அம்பானி நிறுவனம் நிலமே வாங்கியுள்ளது.
கேள்வி 4: ரபேல் ஒப்பந்தத்தில் பல்வேறு ஓட்டைகள் உள்ளன. கடந்த முறை நான் ரபேல் விமானம் குறித்து லோக்சபாவில் பேசிய நாளில், பிரதமர் நரேந்திர மோடி ஒன்றரை மணி நேரம் பதிலளித்தார். ஆனால் அதில் ஐந்து நிமிடம்தான் ரபேல் தொடர்பாக பேசினார். இன்று மோடி லோக்சபாவுக்கு வராமல் தனது அறைக்குள் ஒளிந்துகொண்டுள்ளாரே ஏன்?. மற்றொரு பக்கம் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிமுக எம்பிக்கள் பின்னால் ஒளிந்து கொண்டுள்ளார். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications