"லேட்டா வந்ததுக்கு மன்னிப்பு கேட்டுக்குறேன்.. இதனால்தான் தாமதமா வந்தேன்”.. பிரதமர் மோடி சொன்ன காரணம்
டெல்லி: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இன்று நடந்த உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டிற்கு தான் தாமதமாக வந்தது ஏன் என்பதற்கான காரணத்தை மேடையிலேயே விளக்கி உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை (பிப்ரவரி 24) தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் இந்தியாவைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட முக்கிய தொழிற்துறை தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த உச்சி மாநாட்டுக்கு திட்டமிட்ட நேரத்தைக் காட்டிலும் தாமதமாக வருகை தந்தார் பிரதமர் நரேந்திர மோடி. நிகழ்ச்சிக்கு வந்ததும், தான் தாமதமாக வந்தது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததற்கு அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இருப்பது நினைவுக்கு வந்ததால் சற்று தாமதமாகப் புறப்பட்டேன்.
பள்ளியில் பொதுத் தேர்வுகள் நடைபெறுவதால், மாணவர்களின் நலன் கருதியே எனது பயண நேரத்தை மாற்றினேன். எனது வருகையால் பாதுகாப்புக் காரணங்களுக்காக சாலைகள் மூடப்பட்டால் குழந்தைகள் தேர்வுக்குச் செல்வது தாமதமாகிவிடுமே என்பதாலும், மாணவர்கள் சரியான நேரத்தில் தேர்வு மையத்துக்கு செல்ல வேண்டும் என்பதற்காகவும் தாமதமாகப் புறப்பட்டேன்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "வரும் ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் அதிவேக வளர்ச்சியடையும் என்று உலக வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது. சமீபத்தில் தனது உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகளவில் இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியை காணும்.
உலகளாவிய விண்வெளி நிறுவனங்களுக்கான சிறந்த விநியோகச் சங்கிலியாக இந்தியா வளர்ந்து வருகிறது. ஜவுளி, சுற்றுலா மற்றும் தொழில்நுட்பத் துறைகள் வரும் ஆண்டுகளில் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்." எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய பிரதமர் மோடி, "மத்திய பிரதேச மாநிலத்தில் டபுள் என்ஜின் அரசு அமைக்கப்பட்ட பிறகு மத்திய பிரதேசத்தின் வளர்ச்சியின் வேகம் இரட்டிப்பாகியுள்ளது. இந்தியாவின் மின்சார வாகனப் புரட்சியில் முன்னணி வகிக்கும் மாநிலங்களில் மத்திய பிரதேசம் ஒன்று." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications