செய்தியாளர்கள் கேட்ட அந்த கேள்வி.. பாஜக சொல்வதைத் தான் எப்போதும் கேப்பீங்களா? ராகுல் காந்தி ஆவேசம்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு ராகுல் காந்தி இன்று வருகை தந்தார். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் தயாரிப்பது தொடர்பான ஆலோசனைக்காக வந்த ராகுல் காந்தியிடம் அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் கேள்வி ஒன்றை முன்வைத்தனர். இதனால், ஆவேசமாக பதிலளித்த ராகுல் காந்தி , பாஜக சொல்வதைத் தான் எப்போதும் கேப்பீங்களா? என கடுகடுத்தார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தார். இந்த மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய ராகுல் காந்தி நேற்று சூரத் சென்று இருந்தார்.

நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதாக
தனது சகோதரியும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியாங்கா காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் ராகுல் காந்தியுடன் சூரத் சென்று இருந்தனர். சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்திற்கு கட்சியினர் புடைசூழ ராகுல் காந்தி சென்றதை பாஜக விமர்சித்து இருந்தது. இது தொடர்பாக பாஜக கூறுகையில், " மேல் முறையீடு செய்ய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பெரும் படையுடன் சென்று நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்க ராகுல் காந்தி முயற்சிக்கிறார்" என்று விமர்சித்து இருந்தது.

பாஜக குற்றச்சாட்டு குறித்து கேள்வி
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு ராகுல் காந்தி இன்று வருகை தந்தார். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் தயாரிப்பது தொடர்பான ஆலோசனைக்காக வந்த ராகுல் காந்தியிடம் அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள், நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக பாஜக முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் குறித்து கேள்வி எழுப்பினர்.

பாஜக சொல்வதைத்தான் நீங்கள்..
உடனே செய்தியாளர்களை நோக்கி வந்த ராகுல் காந்தி, "பாஜக என்ன சொல்கிறதோ அதையே ஏன் எப்போதும் சொல்கிறீர்கள்? ஒவ்வொரு முறையும் பாஜக சொல்வதைத்தான் நீங்கள் சொல்கிறீர்கள். மிகவும் எளிமையான ஒரு விஷயம் இருக்கிறது. அதானியின் ஷெல் கம்பெனிகளில் உள்ள 20 ஆயிரம் கோடி பணம் யாருடையது? அது பினாமி பணம். அது யாருக்கு சொந்தமானது" என்று சாடிய ராகுல் காந்தி உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பின்னர், ராகுல் காந்தி தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், சீன விவகாரத்தில் மோடி மவுனம் காப்பதாக விமர்சித்தார்.

பாட்டியின் அடிச்சுவடுகளை பின்பற்றுகிறார்
இதனிடையே ராகுல் காந்தி ஜனநாயகத்தின் 4-வது தூணான ஊடகங்களை இழிவு படுத்தி விட்டதாக பாஜக சாடியுள்ளது. இது தொடர்பாக பாஜக கூறுகையில், நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரையும் ஊடகங்களையும் இழிவுபடுத்துவதுதான் ராகுல் காந்தியின் மனநிலை" என்று சாடியுள்ளது. இது தொடர்பாக பாஜக தலைமை செய்தி தொடர்பாளர் தனது ட்வீட் பதிவில் கூறுகையில், " நாட்டின் ஜனநாயக அமைப்புகளை ஆணவத்துடன் அடிக்கடி ராகுல் காந்தி தாக்கி வருகிறார். இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி தனது பாட்டி (இந்திரா காந்தி)யின் அடிச்சுவடுகளை பின்பற்றுகிறார்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications