காங்கிரசுக்கு முழுக்கு.. பாஜகவில் சேராத குலாம் நபி ஆசாத்.. பின்னணியில் உள்ள 5 முக்கிய காரணங்கள்!
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் பாஜகவில் சேராததற்கு பின்னிணியில் உள்ள 5 முக்கிய காரணம் வெளியாகி உள்ளன.
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக உள்ள சோனியா காந்தியின் வலதுகரமாக செயல்பட்டு வந்தவர் குலாம் நபி ஆசாத். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவராக இருந்தவர் இவர் மத்திய அமைச்சராகவும், ஜம்மு காஷ்மீர் முதல்வராகவும் இருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக குலாம் நபி ஆசாத் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது அதிருப்தி அடைந்தார். 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததை விமர்சனம் செய்தார். மேலும் கட்சிக்கு புதிய தலைமை வேண்டும் என வெளிப்படையாக கூறினார்.

காங்கிரசுக்கு முழுக்கு
இதற்கிடையே தான் சில நாட்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவராக குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்டார். இதனை அவர் ஏற்க மறுத்து ராஜினாமா செய்த நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்தார். அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக குலாம் நபி ஆசாத் அறிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் பின்னடைவுக்கு ராகுல்காந்தியை அவர் குற்றம்சாட்டி இருந்தார். மேலும் ராகுல்காந்தியை அவர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

பாஜகவில் சேர்வதாக விவாதம்
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியை கைக்கழுவிய குலாம் நபி ஆசாத் விரைவில் பாஜகவில் சேர்வார் என்ற தகவல்கள் வெளியாகின. மேலும் சமீபத்தில் ராஜ்யசபா எம்பி பதவிக்காலம் முடிவடைந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி, குலாம்நபி ஆசாத்தை பாராட்டி பேசியதையும், மார்ச் மாதத்தில் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதையும் சுட்டிக்காட்டப்பட்டு விவாதம் நடந்தது.

புதிய கட்சி துவங்கும் குலாம் நபி ஆசாத்
இதற்கிடையே தான் குலாம்நபி ஆசாத் புதிதாக கட்சியை துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சொந்த ஊரான ஜம்மு காஷ்மீரில் அவர் கட்சியை துவங்கி செயல்பட உள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில் தான் குலாம் நபி ஆசாத் பாஜகவில் இணையாமல் உள்ளதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:

முதல் காரணம்
குலாம் நபி ஆசாத் காஷ்மீரை சேர்ந்தவர். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய பிரிவு 370யை மத்திய பாஜக அரசு நீக்கியது. மேலும் ஜம்மு காஷ்மீரை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது. இதற்கு ஜம்மு காஷ்மீரில் இன்று வரை எதிர்ப்பு உள்ளது. இந்த வேளையில் பாஜகவில் சேர்ந்தால் அது குலாம் நபி ஆசாத்தின் சொந்த ஊரிலேயே எதிராக அமையும். இதனால் அவர் பாஜகவில் சேரவில்லை.

2வது காரணம்
குலாம் நபி ஆசாத் 50 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வந்துள்ளார். சிறுபான்மையினருக்கு நெருக்கமான கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியில் இருந்து மத்திய அமைச்சர் மற்றும் ஜம்மு காஷ்மீர் முதல்வராக செயல்பட்ட நிலையில் தற்போது பாஜகவில் இணைவது என்பது சரியாக இருக்காது என நினைத்தார். அதோடு இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்துவிட்டு தற்போது சிறுபான்மை மக்களிடம் பாஜகவிடம் ஓட்டு சேகரிப்பது என்பது தர்மசங்கடத்தை ஏற்படுத்தலாம். இதனை தவிர்க்க அவர் பாஜகவில் கால் வைக்கவில்லை.

3வது காரணம்
மேலும் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு கர்நாடக முதல்வர் பதவி, மத்திய அமைச்சர், ஆளுநர் என முக்கிய பதவிகளை பெற்றவர் எஸ்எம் கிருஷ்ணா. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். அவருக்கு பெரிய அளவில் பொறுப்புகள் வழங்கப்படவில்லை. அதேநேரத்தில் அவர் கடும் விமர்சனத்தை சந்தித்தார். அதாவது காங்கிரஸ் கட்சியில் அனைத்து முக்கிய பதவிகளையும் வகித்துவிட்டு தற்போது பாஜகவில் இணைந்து சொத்துகளை காக்க முயற்சிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இதுபோன்ற விமர்சனத்தை தவிர்க்க குலாம்நபி ஆசாத் முயன்றுள்ளார்.

4வது காரணம்
மேலும் குலாம்நபி ஆசாத்துக்கு தற்போது 73 வயது ஆகிறது. இன்னும் 2 ஆண்டுகளில் அவர் 75வயதை தொட உள்ளார். பாஜகவை பொறுத்தமட்டில் 75 வயது நிரம்பிய நபர்களுக்கு பதவி என்பது வழங்கப்படாது என்ற எழுதப்படாத விதி உள்ளது. இதனால் பாஜகவில் சேர்வது என்பது எதிர்காலத்துக்கு நல்லதாக அமையாது என அவர் நினைத்துள்ளார். இதனால் தான் பாஜகவுக்கு செல்வதை அவர் தவிர்த்துள்ளார்.

5வது காரணம்
அதே நேரத்தில் காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பணிகள் முடிந்துள்ளன. இதனால் தற்போது புதிய கட்சி துவங்கினால் ஜம்மு காஷ்மீரில் மீண்டும் செல்வாக்கு உடைய தலைவராக மாறலாம் என அவர் கணக்கீட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications