உச்சத்தில் கொரோனா.. இந்தியாவில் 2 லட்சத்தை தாண்டிய தினசரி பாதிப்பு.. காரணம் இது தான்.. பரபர தகவல்
டெல்லி: கொரோனா பரவலின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரிப்பதற்கு நான்கு முக்கிய காரணங்கள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டு லட்சத்தைத் தாண்டியுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததாகத் தெரியவில்லை. இதற்கு நான்கு முக்கிய காரணங்கள் உள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய உச்சம்
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது உச்சத்தில் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,00,739 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. நேற்று மட்டும் கொரோனாவால் 1038 பேர் பலியாகியுள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 14 லட்சத்து 71 ஆயிரத்து 577 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 93,528 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

நான்கு காரணங்கள்
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதற்கு நான்கு முக்கிய காரணங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக உருமாறிய மற்றும் இரட்டை மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் உள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் முதலில் பிரிட்டன் வகை கொரோனாவும் அதன்பின் தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் கொரோனா வகைள் கண்டுபிடிக்கப்பட்டன.

இரட்டை மரபணு மாற்றமடைந்த கொரோனா
அதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் மகாராஷ்டிராவில் இரட்டை மரபணு மாற்றமடைந்த கொரோனா வகை உறுதி செய்யப்பட்டது. மகாராஷ்டிராவில் தற்போது கொரோனா உறுதி செய்யப்படுபவர்கள் 15 முதல் 20% இரட்டை மரபணு மாற்றமடைந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வரும் காலங்களில் அதிகரித்தால் மராட்டியத்தில் கொரோனா அதிகரிக்க இது முக்கிய காரணமாக இல்லையா என்பது தெளிவாகத் தெரியவரும்.

மக்களின் அலட்சியம்
இரண்டாவது முக்கிய காரணம் கருதப்படுவது மக்களிடையே அதிகரித்து வரும் அலட்சியப்போக்கு. மத்திய, மாநில அரசுகளும் இதைச் சுட்டிக்காட்டியுள்ளன. பொதுமக்கள் கொரோனா நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பெரும்பாலான மக்கள் மாஸ்க்குகளை அணிவது, தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. வைரஸ் பாதிப்பு அதிகரிக்க இந்த இரண்டும் முக்கிய காரணமாக உள்ளது.

கொரோனா தடுப்பூசி
அதேபோல நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை இன்னும் வேகப்படுத்த வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. பல்வேறு காரணங்களால் சுகாதாரத்துறை ஊழியர்கள் உட்படப் பெரும்பாலானோருக்குத் தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் தயக்கம் நிலவுகிறது. 60 வயதைக் கடந்தவர்களும் பெரும்பாலும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை.

அதிகப்படுத்த வேண்டும்
இந்தியாவில் தற்போது 0.7% மக்களுக்கு மட்டுமே தடுப்பூசியின் இரண்டு டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல 5% மக்களுக்கு மட்டுமே தடுப்பூசியின் ஒரு டோஸ்செலுத்தப்பட்டுள்ளது. இதை அதிகப்படுத்தினால் மட்டுமே வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தடுப்பாற்றல்
இவை தவிர கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடலில் ஏற்படும் தடுப்பாற்றல் கொஞ்சக் காலம் மட்டுமே நீடிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது கொரோனாவில் இருந்து குணமடைபவர்களில் 20 முதல் 30% பேரின் உடல்கள் 6 மாதத்திற்குள் தடுப்பாற்றல் இழந்துவிடுகிறது. இதன் காரணமாக அவர்கள் கொரோனாவால் மீண்டும் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது.

உலக சுகாதார அமைப்பு
நாட்டில் கொரோனா தொடர்ந்து அதிகரிக்க இந்த நான்குமே முக்கிய காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் பட்டியலிட்டுள்ளனர். அதேபோல உருமாறிய கொரோனா, சிகிச்சை அளிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் ஆகியவை காரணமாக கொரோனா கட்டுக்குள் கொண்டு வர நீண்ட காலம் ஆகும் என்று உலக சுகாதார அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும் மக்கள் கொரோனா நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றி தடுப்பூசிகளை விரைவாக எடுத்துக்கொண்டால் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த முடியும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications