Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாலிபான்களை அரவணைக்கும் இந்தியா.. பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, அமெரிக்காவை விட ஆர்வம் ஏன்? இதோ ரகசியம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இதற்கிடையே தான் தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தகியை, நம்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி சந்தித்து பேசியுள்ளார். இதன்மூலம் ஒரே கல்லில் பாகிஸ்தான், சீனாவுக்கு கட்டம் கட்டும் நடவடிக்கையை இந்தியா கையிலெடுத்துள்ளதோடு இந்த சந்திப்பின் பின்னணியில் 5 முக்கிய காரணங்கள் உள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆப்கானிஸ்தானுடன், பாகிஸ்தானுடன் அண்டை நாடுகளாக எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ல் அதிபர் அஷ்ரப் கனியின் ஆட்சியை கவிழ்த்து தாலிபான்கள் ஆட்சியை பிடித்தன. இந்த தாலிபான்களை பல நாடுகளும் இன்று வரை ஏற்கவில்லை. ஆனால் பாகிஸ்தான் தாலிபான்களின் ஆட்சியை அங்கீகரித்தது.

taliban afghanistan india

இதனால் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் இடையே நல்லுறவு ஏற்பட்டது. ஆனால் இந்த உறவு நீண்டகாலம் நீடிக்கவில்லை. தற்போது முற்றிலுமாக விரிசல் அடைந்துள்ளது. இருநாடுகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கடந்த மாதம் ஆப்கானிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைந்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்குதல் நடத்த 47 பேரை கொன்றது தான் முக்கிய காரணமாகும்.

அதாவது ஆப்கானிஸ்தானில் டிடிபி எனும் தெஹ்ரீக் இ தாலிபான்கள் பாகிஸ்தான் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பினர் பாகிஸ்தானிலும் தாலிபான்கள் ஆட்சியை அமைக்க வேண்டும் என்று அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் கொதித்த பாகிஸ்தான் டிடிபி அமைப்பினரை குறிவைத்து தான் கடந்த மாதம் போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்கள் கடுமையாக கண்டித்தனர். அதோடு டிடிபி அமைப்பினர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்துடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றன. இந்த மோதல் என்பது 2 வாரத்துக்கும் மேலாக நடந்து வருகிறது.

இந்த மோதலில் நம் நாடு பாகிஸ்தானை கண்டித்துள்ளது. அதாவது பாகிஸ்தான் போர் விமானங்கள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து 47 பேரை கொன்றது. இதில் அப்பாவி மக்கள், குழந்தைகள் பலியாகின. இதனை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க நம் நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஆப்கானிஸ்தான் தாலிபான் ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் அமீர் கான் முத்தகியை துபாயில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.

இந்த பேச்சுவார்த்தை என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதாவது கடந்த 2021ல் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்தாலும் கூட அவர்களை இன்னும் பல நாடுகளும் அங்கீகரிக்காத நிலை உள்ளது. அதேபோல் இந்தியாவும் கூட மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறது. மாறாக நம் நாட்டு பிரதிநிதிகளும், ஆப்கானிஸ்தான் பிரதிநிதிகளும் பெரிய அளவில் சந்திப்புகளை நிகழ்த்தி இருநாட்டு உறவுகள் பற்றி விவாதிப்பது இல்லை. ஆனால் தற்போது ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் மோதலுக்கு நடுவே நம் நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தகியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையின்போது இருநாடுகள் இடையேயான உறவு, சபாஹர் துறைமுக வர்த்தகம், ஆப்கானிஸ்தானுக்கு நம் நாடு வழங்கும் மனிதாபிமான உதவிகள், சுகாதாரத்துறை சார்ந்த உதவிகள், ஆப்கானிஸ்தான் அகதிகள் மறுவாழ்வு மையம், ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கு நம் நாடு உதவி செய்வது உள்ளிட்டவை பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர இந்த சந்திப்பின் பின்னணியில் 5 முக்கிய காரணங்கள் உள்ளன. குறிப்பாக நமக்கு எதிரியாக உள்ள சீனா, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க ஆப்கானிஸ்தான் உடனான உறவு என்பது மிகவும் முக்கியமாக உள்ளது. ஆப்கானிஸ்தானுடன் நல்லுறவை வலுப்படுத்துவதன் பின்னணியில் உள்ள 5 முக்கிய காரணங்கள் வருமாறு:


முதல் காரணம்

நம் நாட்டின் காஷ்மீருக்கு உரிமை கொண்டாடி பயங்கரவாதிகளை வைத்து நமக்கு எதிராக பாகிஸ்தான் சதிவேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதனால் ஆப்கானிஸ்தானில் 2021ல் தாலிபான்கள் கைப்பற்றியதும் துள்ளிக்குதித்த முதல் நாடும் பாகிஸ்தான் தான். தற்போது உறவு கசந்துள்ளது. தற்போது பாகிஸ்தானுடன் டிடிபி எனும் தெஹ்ரீக் இ தாலிபான் அமைப்பினர் தான் ஆப்கானிஸ்தானில் இருந்து சண்டையிட்டு வருகின்றனர். இவர்களும் ஆப்கானிஸ்தானில் ஆளும் தாலிபான்களும் வெவ்வேறானவர்கள் என்றாலும் கூட நல்ல உறவில் இருக்கிறார்கள். இதனால் தான் பாகிஸ்தான்மீதான டிடிபியின் தாக்குதலுக்கு ஆளும் தாலிபான்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தாலிபான்களை தற்போது ஒழிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிளம்பி உள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்த நம்நாடு முடிவு செய்துள்ளது.

அதாவது பாகிஸ்தானை போல ஆப்கானிஸ்தானிலும் பயங்கரவாதிகள் தங்கியிருந்தனர். இவர்களை ஒழிக்க தான் அமெரிக்க படைகள் வந்திறங்கின. தற்போது பாகிஸ்தான் இடையேயான மோதலில் நம் நாடு ஆப்கானிஸ்தான் பக்கம் நிற்கும்போது அவர்களால் நம் நாட்டுக்கு எந்த பிரச்சனையும் வராது. அதாவது பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் மிரட்டுவது போல் ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் மிரட்டமாட்டார்கள் என்று நம் நாடு கணக்கு போட்டுள்ளது. இப்போது நிலவும் மோதலால் பாகிஸ்தானுடன் இனி ஆப்கானிஸ்தானுக்கு சுமூக உறவு ஏற்பட காலம் பிடிக்கும். அதனை சாதகமாக்கி ஆப்கானிஸ்தானுடன் நம் நாடு நெருக்கம் காட்ட தொடங்கி உள்ளது.

2வது காரணம்

ஆப்கானிஸ்தானும், ஈரான் எல்லையை பகிர்ந்து வருகிறது. இதனால் ஈரானும், ஆப்கானிஸ்தானில் நல்ல உறவை பேண தொடங்கியது. அதோடு ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசை ஈரான் அவ்வப்போது புழ்ந்து பேச தொடங்கியது. ஆனால் இஸ்ரேல், ஹமாஸ், ஹெஸ்புலா, ஹவுதி பஞ்சாயத்தை பார்ப்பதற்கே ஈரானுக்கு நேரம் இல்லை. இஸ்ரேலுக்கு எதிரான மோதலில் பெரிய அளவில் பலவீனம் அடைந்து விட்டது ஈரான். இதனால் ஈரானால் ஆப்கானிஸ்தானுடன் நெருக்கம் காட்ட நினைத்தாலும் அது முடியாத காரியமாக உள்ளது. இதனை சாதகமாக்கி நம் நாடு ஆப்கானிஸ்தானை நம்முடன் நெருக்கமாக்கி கொள்ள நினைக்கிறது.

3வது காரணம்

இது ரஷ்யாவை பற்றியது. அதாவது பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் ஆப்கானிஸ்தான் அரசு தங்களுடன் இணைந்து செயல்பட ஆரம்பித்து இருக்கிறது என்று ரஷ்யா கூறி இருக்கிறது.இதே ரஷ்யா தான் தலிபான்களை பயங்கரவாத பட்டியலில் வைத்திருந்தது.
இப்போது அந்த பட்டியலில் இருந்து நீக்குவதற்கான தீர்மானம் பார்லிமென்ட்டில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
இதன்மூலம் ஆப்கனுடன் ரஷ்யா நெருங்கி வருவது உறுதியாகி இருக்கிறது. சமீபத்தில் கூட பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதலை நிறுத்த வேண்டும் என்று ரஷ்யா தெரிவித்து இருந்தது. ஆனால் தற்போது உக்ரைன் போரில் ரஷ்யா பிஸியாக இருப்பதால், ஆப்கானிஸ்தானுடன் அந்த நாட்டால் நெருக்கம் காட்ட முடியவில்லை. இதனால் ரஷ்யாவுக்கு முன்பாகவே நம் நாடு ஆப்கானிஸ்தானை தோழனாக்க முயல்கிறது.

4வது காரணம்

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைய முக்கிய காரணமே அமெரிக்கா தான். அமெரிக்கா படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியபிறகு தான் அங்கு தாலிபான்கள் உள்நாட்டு போரை தொடங்கி அதிபர் அஷ்ரப் கனியின் ஆட்சியை 2021ல் கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றினர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெறும் முடிவை எடுத்தவர் டொனால்ட் டிரம்ப். அவரது முந்தைய அரசில் தான் இந்த ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது. அதை செயல்படுத்தியவர் தான் ஜோ பைடன் இப்போது மீண்டும் டிரம்ப் அதிபர் ஆகிறார். எனவே அவர் எப்படியும் ஆப்கனுடன் நெருக்கம் காட்டவே வாய்ப்பு இருக்கிறது. இப்படி அமெரிக்கா படிப்படியாக தாலிபான் அரசை நெருங்கும் நிலையில் அதற்கு முன்பாகவே நம் நாடு முந்த தொடங்கி உள்ளது.


5வது காரணம்

இது சீனாவுடன் தொடர்புடையது. அதாவது தாலிபான் அரசை சீனா அங்கீகரிக்க தொடங்கிவிட்டது. ஆப்கானிஸ்தானில் சீனா தூதரகம் திறந்துள்ளது. அதேபோல் தலிபான் தூதரகத்தை தங்கள் நாட்டில் அமைத்து கொடுத்திருக்கிறது.அதாவது, இரு அரசுக்கும் இப்போது தூதரக உறவு துவங்கி விட்டது. மேலும் உள்நாட்டு போரில் சேதமடைந்த ஆப்கானிஸ்தானுக்கு பல்வேறு உதவிகளை சீனா செய்ய தொடங்கி உள்ளது. புதிதாக பாலம், அரசு கட்டடங்கள் உள்ளிட்டவற்றை அமைக்க சீனா நிதியுதவி செய்வதோடு, கட்டுமான பணிகளுக்க தேவையான வசதிகளை செய்து வருகிறது. மேலும் சீனாவின் உதவியுடன் ஆப்கனில் வீடு, பூங்கா கட்டிக்கொடுக்கும் நகர்ப்பற மேம்பாட்டு திட்டம் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் மூலம் ஆப்கனில் உள்ள இயற்கை வளங்களை சீனா குறிவைக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் இந்தியா மற்றும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் விட்டு சென்ற இடத்தை சீனா வேகமாக நிரப்ப பார்க்கிறது. எனவே சீனாவை முந்த வேண்டிய இடத்தில் இந்தியா உள்ளது. இதனால் நம் நாடும் ஆப்கானிஸ்தான் இடையேயான உறவை புதிதாக புதுப்பிக்கும் வகையில் இந்த சந்திப்பை நிகழ்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


மேலும் ஆப்கானிஸ்தான் உடனான நல்லுறவு மூலம் தாலிபான்களை நம் பேச்சை கேட்க வைக்க முடியும். அதேபோல் நமக்கு எதிரான பயங்கரவாதிகள் அங்கு எழுச்சி பெறுவதையும், பாகிஸ்தானின் சதியையும் தவிடுபொடியாக்க முடியும். ஆப்கனில் இந்தியாவின் வர்த்தகத்தை பெரிய அளவில் ஸ்தாபிக்க முடியும். மொத்தத்தில் பயங்கரவாதத்தின் எழுச்சியை தடுக்கவும், பாகிஸ்தானை தனிமைப்படுத்தவும், இந்தியாவின் வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் தாலிபான் அரசுடன் இந்தியா இணக்கம் காட்டுவது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இதற்காக தான் நம் நாடு நேர்த்தியாக காய்நகர்த்தி அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரை நம் நாட்டின் வெளியுறவுத்துறை செயலர் சந்தித்துள்ளார் என்கின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+