அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு.. ஜன.22ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டது ஏன்! காரணம் இதுதான்
டெல்லி: அயோத்தி ராமர் கோயிலில் வரும் ஜன.22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ள நிலையில், கும்பாபிஷேக விழாவிற்கு 22ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்துக்களின் புனித கடவுளான ராமர் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிறந்ததாக நம்பப்படுகிறது. இங்கே தான் இப்போது புதிதாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகத்திற்குப் பக்தர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

அயோத்தி ராமர் கோயிலில் வரும் ஜன.22ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. குறிப்பாக அன்றைய தினம் பகல் 12.20 மணிக்கு ராமர் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். இந்த நிகழ்வில் பிரதமர் தொடங்கிப் பல முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
ராமர் கோயில்: அன்றைய தினம் நாடு முழுக்க இருந்து பல்வேறு தரப்பில் இருந்தும் அயோத்திக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குத் தேவையான நடவடிக்கைகளும் அங்கே எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அங்கே கடுமையான பாதுபாக்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே நம்மில் பலருக்கும் ஏன் ஜன. 22ஆம் தேதி இந்த ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது என்ற கேள்வி வரும். அதற்கான பதிலை நாம் இப்போது பார்க்கலாம்.
வரும் ஜன. 22ஆம் தேதி மிருகஷிரா நட்சத்திரம் வருகிறது.. ஜன. 22ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை 3:52 மணிக்குத் தொடங்கும் இது மறுநாள் ஜனவரி 23, 2024 செவ்வாய்க்கிழமை அதிகாலை 4:58 வரை நீட்டிக்கிறது. இதன் காரணமாகவே ஜன. 22ஆம் தேதி இறுதி செய்யப்பட்டது. அன்றைய தினம் காலை 11:51 முதல் மதியம் 12:33 நேரத்தில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனத் தெரிகிறது.
ஏன் முக்கியம்: மிருகஷிரா நட்சத்திரம் என்பது வேத ஜோதிடத்தில் ஒரு சக்திவாய்ந்த நட்சத்திரமாகக் கருதப்படுகிறது. இது அழிவே இல்லாத சோமா என்ற கடவுளுடன் இணைக்கப்பட்டுள்ளது.. 23.20 டிகிரி ரிஷபம் முதல் 6.40 டிகிரி மிதுனம் வரை இது பரவி இருக்கிறது. செவ்வாய்க் கிரகத்தால் ஆளப்படும் இது.. மான் தலையால் அடையாளப்படுத்தப்படுகிறது, உண்மை மற்றும் அறிவை குறிப்பதாக இது இருக்கிறது.
இந்து பாரம்பரியத்தின்படி இது மங்களகரமான தருணமாகக் கருதப்படுகிறது. முன்பே கூறியது போல இந்த நட்சத்திரம் ஜன.22ஆம் தேதி தொடங்கி ஜன.23 அதிகாலை வரை நீட்டிக்கிறது. புராணங்களின்படி, அபிஜித் முகூர்த்த நாளில் தான் திரிபுரசுரன் என்ற அரக்கனைச் சிவபெருமான் கொன்றார். எனவே, இந்த நேரத்தில் அனைத்து தோஷங்களையும் நீக்க முடியும் என்று நம்பப்படுகிறது. இதன் மூலம் வாழ்வில் இருக்கும் துருதிஷ்டத்தை நீக்க முடியும் என நம்பப்படுகிறது.
தேர்வு: மேலும், புதிய முயற்சிகளைத் தொடங்க சரியான நாளாகப் பார்க்கப்படுகிறது. எந்தவொரு நல்ல காரியத்தையும் இந்த நாளில் தொடங்கினால் நன்மை தரும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. மேலும், இந்த நாளில் அமிர்த சித்தி யோகம் மற்றும் சர்வார்த்த சித்தி யோகம் ஆகியவை மிருகஷிரா நட்சத்திர காலத்துடன் ஒத்துப்போகின்றன. இதன் காரணமாகவே ஜன.22ஆம் தேதியை ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்குத் தேர்வு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications