கும்பல் கும்பலா வந்து டிக்கெட் எடுக்கறாங்க ஓகே.. ஆனா யாரும் ரயில் ஏறுவது கூட இல்லையே! ஏன் தெரியுமா
டெல்லி: இந்தியாவில் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு பின்னால் பல விநோத கதைகள் இருக்கும். அப்படியொரு விநோதமான கதையின் பின்னணிதான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
நடிகர் வடிவேலு காமெடி காட்சி ஒன்றில், பலரும் வரிசையாக அவரது தியேட்டருக்கு வருவார்கள். ஆனால், வாசலிலேயே "என்னப்பா இப்படி ஆகிடுச்சு.." என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிடுவார்கள். இப்படியே பலர் வந்து செல்வார்கள்.

இது படத்தில் வரும் காட்சியாக இருந்தாலும் கூட, அதேபோல ஒரு ரியல் சம்பவம் இப்போது அரங்கேறி உள்ளது. இதில் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் டிக்கெட் எடுத்தாலும் ரயில் நிலையத்தில் ஏறுவதில்லையாம். இது ஏன் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ரயில்வே: இந்தியாவில் ரயில் பயணங்கள் தான் எப்போதுமே முக்கியம்.. உலகின் மிகப் பெரிய ரயில் நெட்ஒர்க்கை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது.. நீண்ட தூரம் சவுகரியமாகப் பயணிக்க ரயில் பயணங்கள் தான் எப்போதும் பொதுமக்களின் முதல் சாய்ஸாக இருந்து வருகிறது. இதனால் தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய நாட்களில் முதலில் விற்றுத் தீர்வது ரயில் டிக்கெட்கள் தான். அந்தளவுக்கு ரயில் பயணங்கள் இந்தியாவில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
அதேநேரம் நமது நாட்டில் ஒவ்வொரு ரயில் நிலையத்திற்குப் பின்னாலும் ஒரு சுவாரசியமான கதை இருக்கும். அப்படியொரு ரயில் நிலையம் குறித்துத் தான் நாம் இதில் பார்க்கப் போகிறோம். இந்த ரயில் நிலையம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. அங்கே பிரயாக்ராஜ் நகரில் உள்ள தயாள்பூர் என்ற இடத்தில் தான் இந்த ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. இந்த ரயில்வே ஸ்டேஷனில் வரிசையாக வந்து பலரும் டிக்கெட் வாங்குகிறார்கள்.
பயணிப்பதில்லை: ஆனால் யாருமே பயணிப்பதில்லையாம். அங்கே ஓரிரு ரயில்கள் தான் நிற்கிறது என்றாலும் அதிலும் கூட யாரும் பயணிப்பதில்லையாம். ரயில் நிலையத்தில் யாருமே பயணிக்காத நிலையில், எதற்காக இப்படி வரிசையாகப் பலரும் வந்து டிக்கெட் எடுக்கிறார்கள்.. அதுவும் தினசரி எடுக்கிறார்கள் என்பதே இங்குப் பலருக்கும் கேள்வியாக இருக்கும். இதுவே விநோதமாக இருக்கிறது. அதற்கான விடை இன்னும் வினோதமாக இருக்கும். அது குறித்து நாம் பார்க்கலாம்.
டூ வீலர்கள் வந்ததால் ரயில் நிலையத்தை மக்கள் பயன்படுத்துவது மிகவும் குறைந்துவிட்டது. இங்கே பயணிகள் செல்வது அடியோடு குறைந்துவிட்டது என்றே சொல்லலாம். ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கும் குறைந்தது இந்தளவுக்குப் பயணிகள் வர வேண்டும் என்று இந்தியன் ரயில்வே சில நிபந்தனைகளை நிர்ணயம் செய்துள்ளது.
நிபந்தனை: அதாவது மெயின் லைனில் இருக்கும் ரயில்வே ஸ்டேஷனில் தினசரி குறைந்தது 50 டிக்கெட்கள் விற்பனையாக வேண்டும். அதேபோல கிளை லைனில் இருந்தால் குறைந்தது 25 டிக்கெட்கள் விற்பனையாக வேண்டும். தயாள்பூர் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்த நிலையில், இந்த நிபந்தனையைப் பூர்த்தி செய்யவில்லை. இதன் காரணமாக இந்த ரயில்வே ஸ்டேஷனை மூட இந்தியன் ரயில்வே முடிவு செய்தது.
இருப்பினும், இதை தயாள்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இதனால் ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க அவர்கள் பல முறை விண்ணப்பித்தனர். முதலில் இந்தியன் ரயில்வே இதை ஏற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும், மக்கள் தொடர்ந்து வலியுறுத்திய நிலையில், கடந்த 2022இல் இந்த ரயில்வே ஸ்டேஷனை திறக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்தது.
என்ன காரணம்: அப்போது இங்குள்ள பொதுமக்கள் இந்த ரயில்வே நிலையத்தை மீண்டும் மூட அனுமதிக்கக் கூடாது என்ற முடிவை எடுத்தனர். இதனால் பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து நிதியைத் திரட்டி குறைந்தபட்ச டிக்கெட்களை வாங்கிக் கொள்கிறார்கள். ரயில்களில் பயணிக்கத் தேவையில்லை என்றாலும் ரயில் நிலையத்தை மீண்டும் மூடக் கூடாது என்பதற்காக இப்படி ரயில் டிக்கெட்களை மட்டும் வாங்கிக் கொள்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications