"மொத்தம் 5 பிளான்கள்!" உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை காக்க புது யுக்தி! பலன் தருமா
டெல்லி: உத்தரகண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் 8ஆவது நாளாகத் தொடரும் நிலையில், மத்திய அரசு இந்த விவகாரத்தில் சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
உத்தரகண்ட் மாநிலத்தில் கட்டப்பட்டு வந்த சுரங்கத்தில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. கடந்த வாரம் ஏற்பட்ட இந்த விபத்தில் உள்ளே 41 கட்டுமான தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் இப்போது தீவிரமாக நடந்து வருகிறது.

மீட்பு பணிகள் 170 மணி நேரத்தைக் கடந்து 8ஆவது நாளாகத் தொடரும் நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கத் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சுரங்கப் பாதை: சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த உணவு மற்றும் தண்ணீர் மட்டுமே இருக்கிறது. இதனால் நாட்கள் செல்ல செல்ல அவர்களின் உடல்நலம் மற்றும் மனநிலை குறித்த கவலைகள் எழுந்துள்ளன. இதுவரை தொழிலாளர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கையில் எந்தவொரு வெற்றியும் கிடைக்கவில்லை. அவர்களைக் காக்க எடுக்கும் நடவடிக்கையில் மேலும் மண் சரிவு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மீட்புப் படையினர் தெளிவாக உள்ளனர்.
அங்குள்ள உத்தர்காசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் மீட்கும் பணிகள் 8வது நாளாகத் தொடரும் நிலையில், சுரங்கப்பாதையின் மேலிருந்து செங்குத்தாகத் துளையிட்டு அவர்களை மீட்கும் திட்டத்தை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.
மொத்தம் 5 பிளான்: எந்த இடத்தில் துளையிட வேண்டுமோ அங்கே எளிதாகச் செல்ல புதிய சாலையை அமைக்கும் பணிகளையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இன்று பகலில் அந்த சாலை அமைக்கும் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து செங்குத்தாகத் துளையிட்டு அவர்களை மீட்கும் பணிகளை அதிகாரிகள் ஆரம்பிக்க உள்ளனர்.
மீட்புப் பணிகளில் உதவச் சர்வதேச சுரங்கப்பாதை வல்லுநர் பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸிடமும் உதவி கோரப்பட்டுள்ளது. அவர் மீட்புப் பணிகளில் நேரடியாக உதவவும் இந்தியாவுக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், ஒரு நேரத்தில் ஒரே ஒரு பிளானை மட்டும் செயல்படுத்துவதற்குப் பதிலாக ஒரே நேரத்தில் 5 பிளானை முயல்வது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றுள்ளது. இது தொடர்பாகப் பிரதமர் அலுவலகத்திடமும் ஆலோசித்ததாகத் தெரிகிறது.
என்ன காரணம்: எந்த பிளான் வேலை செய்யும் என்பது யாருக்கும் தெரியாது. எனவே, ஒரே ஒரு திட்டத்தை மட்டும் நம்பாமல் ஒரே நேரத்தில் 5 திட்டங்களை உருவாக்கி மீட்புப் பணிகளை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் உள்ளே சிக்கியுள்ள நபர்களைச் சீக்கிரம் மீட்க முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக 5 பிளான்கள் வகுக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாகத் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் பல்வேறு ஏஜென்சிகளும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களிடமும் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.
கடந்த நவ.12ஆம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்ட நிலையில், அப்போது முதல் இந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கியுள்ளனர். அவர்களிடம் சில நாட்களுக்குத் தேவையான உணவும் நீரும் மட்டுமே இருக்கிறது. இதன் காரணமாகவே நேரம் செல்ல செல்ல கவலை அதிகரித்து வருகிறது.
அதேநேரம் மீட்புப் பணிகள் துரிதமாக நடக்கவில்லை என்று சுரங்கத்தில் சிக்கிய நபர்களின் சக ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சம்மந்தப்பட்ட சுரங்க நிறுவனம் அலட்சியமாக இருந்ததே இந்த விபத்திற்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications