மணிப்பூர் செல்வது ஏன்? ‛‛இந்தியா’’ கூட்டணியின் நோக்கம் இதுதான்! பின்னணியை போட்டுடைத்த கனிமொழி
டெல்லி: மணிப்பூர் வன்முறை குறித்து ஆய்வு செய்வதற்காக 2 நாள் பயணமாக ‛‛இந்தியா'' கூட்டணியின் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் அடங்கிய 21 பேர் கொண்ட குழு டெல்லியில் இருந்து இன்று புறப்பட்டுள்ள நிலையில் அதுபற்றிய முக்கிய தகவலை திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.
மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் இரண்டரை மாதங்களுக்கு மேலாக வன்முறை நடந்து வருகிறது. இந்த வன்முறையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் கைக்கொடுக்கவில்லை. தொடர்ந்து குக்கி-மைத்தேயி மக்கள் இடையே பதற்றம் நிலவி வருகிறது.

இத்தகைய சூழலில் தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன. இது இன்னும் ஏற்கப்படாததால் கடந்த 7 நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் பெரும்பாலும் ஒத்திவைக்கப்பட்டது.
இத்தகைய சூழலில் தான் காங்கிரஸ் சார்பில் மத்திய அரசு மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நோட்டீஸ் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் விரைவில் விவாதம் நடைபெற உள்ளது. இந்த வேளையில் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடியை பேச வைக்க எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே தான் நாடாளுமன்றத்தில் விவாதம் நடப்பதற்கு முன்பாக பாஜகவுக்கு எதிராக ‛‛இந்தியா'' என்ற பெயரில் உருவாகி உள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் எம்பிக்கள் மணிப்பூரை நேரில் ஆய்வு செய்ய முடிவு செய்தனர். அதன்படி 2 நாள் பயணமாக இன்று 21 பேர் கொண்ட குழு டெல்லியில் இருந்து மணிப்பூருக்கு புறப்பட்டு சென்றது.
இந்த குழுவில் திமுக எம்பி கனிமொழி உள்ளார். இந்நிலையில் தான் மணிப்பூர் செல்வதற்காக இன்று காலையில் டெல்லி விமான நிலையத்துக்கு எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் வந்தனர். இந்த வேளையில் மணிப்பூர் விசிட் குறித்து திமுக எம்பி கனிமொழியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், ‛‛ மணிப்பூர் வன்முறையில் சுமார் 50 ஆயிரம் மக்கள் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து பேச உள்ளோம். நாங்கள் மணிப்பூர் மக்களை சந்தித்து அவர்களுடன் நிற்கிறோம் என்பதையும், அவர்களுக்காக நாங்கள் போராடுகிறோம் என்பதையும் கூறப்போகிறோம்.
மணிப்பூர் செல்வதற்காக நாங்கள் அனுமதி வாங்கி உள்ளோம். அதோடு இந்திய சிட்டிசனான நாங்கள் மக்கள் பிரநிதியாக இரு்கிறோம். அதோடு இது எங்களின் பணியாக உள்ளது. இதனால் மணிப்பூர் செல்கிறோம். மணிப்பூர் மாநில ஆளுநரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம். முகாம்களில் நாங்கள் பார்க்கும் விஷயங்களை அவரிடம் எடுத்து கூற உள்ளோம். மணிப்பூர் பற்றி நாடாளுமன்ற விவாதத்தில் பிரதமர் பதிலளிப்பார் என எதிர்பார்க்கிறோம்'' என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications