மணிப்பூரில் சுழன்றடித்த "மர்ம" பொருள்.. அடுத்த நொடி பாய்ந்த ரபேல் விமானம்.. அடுத்தடுத்து பதற்றம்
டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் யுஎப்ஓ கண்டறியப்பட்ட நிலையில், உடனடியாக அங்கே ரபேல் விமானங்கள் அனுப்பப்பட்டதாக பரபர தகவல் வெளியாகியுள்ளது.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பிர் திகேந்திரஜித் ஏர்போர்ட் உள்ளது. அங்கே ஏர்போர்ட்டிற்கு மிக அருகே நேற்று திடீரென யுஎப்ஓ எனப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் பறந்துள்ளது.

இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பாதுகாப்பு காரணங்களால் விமானச் சேவை நிறுத்தப்பட்டது. நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இந்த பறக்கும் பொருள் காணப்பட்டது.
மர்ம பொருள்: முதலில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை இதை பார்த்த நிலையில், உடனடியாக இது குறித்து விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அது ஏடிசி கோபுரத்தின் மேலே பறந்துள்ளது. அங்கிருந்த அனைவருக்கும் இந்த மர்ம பொருள் தெரிந்துள்ளது.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள விமான நிலையத்திற்கு அருகே நேற்று அடையாளம் தெரியாத பொருள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக ஆய்வு செய்ய அங்கே இந்திய விமானப்படை இரண்டு ரஃபேல் போர் விமானங்களை அனுப்பியுள்ளது. உடனடியாக அங்கே ரபேல் விமானங்கள் சென்ற போதிலும், அவர்களால் எந்தவொரு பொருளையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று விமானப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரபேல் விமானம்: முதலில் ஒரு ரபேல் விமானத்தை அனுப்பி அந்த பகுதியை சோதனை செய்துள்ளனர். அந்த ரபேல் விமானம் திரும்பிய பிறகு மற்றொரு விமானத்தையும் மீண்டும் சரி பார்க்க அந்த பகுதிக்கு அனுப்பியுள்ளனர். இருப்பினும், அங்கே அவர்களால் எதையும் கண்டறிய முடியவில்லை. இந்த மர்ம பொருள் குறித்த தகவல் கிடைத்தவுடன் இந்திய விமானப்படையின் கிழக்கு கமெண்ட் இந்த ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து இந்திய விமானப்படையின் கிழக்கு கமெண்ட் தனது எக்ஸ் பக்கத்தில், "இம்பால் விமான நிலையத்தில் இருந்து பெறப்பட்ட காட்சிகள் அடிப்படையில் இந்திய விமானப் படை அதன் வான் பாதுகாப்பு சிஸ்டத்தை செயல்படுத்தியது. அங்கே தீவிர ஆய்வு பணிகள் மேற்கொண்ட போதிலும் அங்கே வேறு எந்தவொரு பொருளும் கண்டறியப்படவில்லை" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஏர்போர்டில் மர்ம பொருள்: அந்த அடையாளம் தெரியாத மர்ம பொருள் அங்கே விமான நிலையத்திற்கு மேலே பறந்து கொண்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர். ஏர்போர்ட் மேலே இருந்த அந்த யுஎப்ஓ மாலை 4 மணி வரை அங்கே இருந்ததாகவும் வெறும் கண்களால் பார்த்தாலே அது தெரிந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அது ஏர்போர்ட்டில் இருந்து மேற்கு நோக்கி நகர்ந்து மறைந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மணிப்பூரின் இம்பால் ஏர்போர்ட்டில் பறந்த இந்த மர்ம பொருளால் அங்கே பல மணி நேரம் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் கொல்கத்தாவில் இருந்து இம்பாலுக்கு வந்த இண்டிகோ ஏ320 விமானம் சிறிது நேரம் அது வானத்திலேயே வட்டமடித்துக் கொண்டிருந்தது. பிறகு 25 நிமிடங்கள் கழித்து அது அசாமின் கவுகாத்திக்கு திருப்பி விடப்பட்டது. அதேபோல டெல்லியில் இருந்து இம்பாலுக்கு வந்த விமானமும் கொல்கத்தாவுக்கு திரும்பி விடப்பட்டது.
அந்த மர்ம பொருள் மறைந்த பிறகே மற்ற விமானங்கள் தரையிறங்க அனுமதி தரப்பட்டது. இதனால் சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, இம்பால் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications