நீட்: முந்தைய அதிமுக அரசு அஜாக்கிரதை- ஒரிஜனல் சூட்டுக்கு பதில் ரிட் மனு தாக்கல் செய்தது அம்பலம்!
நீட் தேர்வுக்கு எதிராக முந்தைய அதிமுக அரசின் ரிட் மனு வாபஸ் பெறப்பட்டு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் விவகாரத்தில் முந்தைய அதிமுக அரசானது போதுமான அக்கறை இல்லாமல் ரிட் மனுவைத் தாக்கல் செய்துவிட்டது என்பது திமுகவினரின் குற்றச்சாட்டு. பொதுவாக கொள்கை முடிவுகளுக்கு எதிராக ஒரிஜனல் சூட் மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நடைமுறையை முந்தைய அதிமுக அரசு பின்பற்றவில்லை என்பதும் திமுகவினர் விமர்சனம்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு தர கோரியும் நீட் தேர்வுக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.

பின்னர் திமுக ஆட்சியில் அமர்ந்த போதும் இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. உச்சநீதிமன்ற விசாரணையின் போது தமிழ்நாடு அரசு வாய்தா கேட்டிருந்தது. இந்த வாய்தா கேட்டதாலேயே தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயம் கிடைக்கவில்லை என்று இப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடைவிடாமல் அறிக்கை வெளியிட்டார்.
நீட் தேர்வு வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிக்கை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தை எதிர்த்து எனது தலைமையிலான அம்மாவின் அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு இந்த விடிய அரசு கடந்த ஒன்றரை வருடங்களாக அந்த வழக்கை நடத்த எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. இந்த நிலையில் அந்த வழக்கானது தாமாகவே உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த வழக்கையும் நடத்த மனமில்லாமல் இந்த விடியா திமுக அரசு வாய்தா கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீட் தரவரிசை பட்டியல் வெளி வர உள்ள நிலையில், வழக்கை நடத்தாமல் வாய்தா கேட்பதில் மிகவும் கண்டிக்கத்தக்கது. இச்செயல் தமிழக மாணவர்களின் மேல் இந்த விடிய அரசின் பொறுப்பற்ற தன்மையை வெளிக்காட்டுகிறது. முதலமைச்சர் மு. க ஸ்டாலின் இந்த முறையாவது தகுந்த மூத்த வழக்கறிஞரை நியமித்து அம்மா அரசு தொடர்ந்த நீட் தொடர்பான வழக்கை வெற்றிகரமாக நடத்தி, நீட் நுழைவுத் தேர்வு சட்டத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என கூறியிருந்தார்.
இதேபோல கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டிருந்த அறிக்கையிலும் நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தை எதிர்த்து எனது தலைமையிலான அம்மாவின் அரசால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு நிலுவையில் இருந்த போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு இந்த அரசு, கடந்த ஒன்றரை வருடங்களாக அந்த வழக்கை நடத்த எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், அந்த வழக்கானது தாமாகவே உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் வழக்கை நடத்தாமல் இந்த விடியா அரசு வாய்தா கோரியதால், மாண்புமிகு உச்ச நீதிமன்றம் நீட் வழக்கை இந்த ஜனவரி மாதத்தில் விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று (3.1.2023), நீட் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த கையாலாகாத திமுக அரசு சார்பில், நீட் வழக்கை ஆறு மாதத்திற்கு தள்ளி வைக்குமாறு வாய்தா கோரப்பட்டது. ஆனால், மாண்புமிகு உச்ச நீதிமன்றம் இந்த விடியா அரசின் கோரிக்கையை நிராகரித்து கடும் கண்டனம் தெரிவித்து தலையில் குட்டியுள்ளது. "தமிழகத்திற்கு NEET-ல் இருந்து விலக்கு அளிக்க தங்களுடைய அரசு சட்டம் ஒன்றை இயற்றி இருப்பதாகவும், அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளதால், விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றும் இந்த விடியா அரசு கோரியது. இதை ஏற்க மறுத்த மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 'நீங்கள் எடுக்கும் நடவடிக்கை பற்றி நீதிமன்றத்திற்கு கவலை இல்லை. இந்த வழக்கை உடனடியாக முடிக்கும் வழிவகைகளைப் பாருங்கள்' என்று கண்டிப்புடன் கூறி, நீட் வழக்கை வரும் பிப்ரவரி மாதத்தில் மீண்டும் பட்டியலிட உத்தரவிட்டுள்ளது என கூறியிருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு அண்மையில் உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் புதிய மனுவை ஒன்றைத் தாக்கல் செய்தது. இந்த மனு ஒரிஜனல் சூட் மனுவாகும். இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் முந்தைய அதிமுக அரசு தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை திரும்பப் பெற உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது தமிழ்நாடு அரசு தரப்பு.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி அஜய் ரஸ்தோகி, யார் இந்த ரிட் மனுவை தாக்கல் செய்தது? ஏன் ரிட் மனுவாக தாக்கல் செய்தீர்கள்? என கேள்வி எழுப்பினார். இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில், முந்தைய ஆட்சிதான் ரிட் மனுவைத் தாக்கல் செய்தது. தற்போதைய ஆட்சி, ஒரிஜனல் சூட் மனு தாக்கல் செய்துள்ளது. ஆகையால் ஒரிஜனல் சூட் மனு மீது விசாரணை நடத்த வேண்டும் என வாதிடப்பட்டது. இதனை ஏற்று முந்தைய ஆட்சியில் அதாவது எடப்பாடி பழனிசாமி அரசு பெருமையுடன் பேசி வரும் ரிட் மனுவை வாபஸ் பெற உச்சநீதிமன்றம் அனுமதித்தது.
பொதுவாக அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக ஒரிஜனல் சூட் மனுக்கள்தான் தாக்கல் செய்யப்படும். ஆனால் நீட் விவகாரத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்துவிட்டது முந்தைய அதிமுக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக திமுகவின் மாணவர் அணித் தலைவர் ராஜீவ் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில், தனக்காக, தன் கட்சிக்காக வாதாடி நீதிமன்றத்தில் வெல்ல தெரிந்த எடப்பாடி தமிழ்நாட்டு மாணவர்களுக்கு எதிராக உள்ள நீட் குறித்து எவ்வித அக்கறையும் இல்லாது தவறாக தாக்கல் செய்திருந்த வழக்கினை இன்று தி.மு.கழக அரசு திரும்ப பெற்று நீட் தேர்வு எதிராக முறையான வழக்கினை தாக்கல் செய்துள்ளது! என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications