நாட்டிலேயே இந்த ஒரு தொகுதியில் மட்டும் 2 முறை லோக்சபா தேர்தல் நடக்குது.. என்ன காரணம் தெரியுமா!
டெல்லி: லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்த நிலையில், அதில் 543 தொகுதிகள் என்பதற்குப் பதில் 544 என்று இடம்பெற்றுள்ளது.. அதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடக்கிறது. அதைத் தொடர்ந்து வரும் ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

லோக்சபா தேர்தல்: இருப்பினும், இன்று மாலை தேர்தல் கமிஷன் அட்டவணையை அறிவித்தபோது, 543 லோக்சபா தொகுதிகளுக்குப் பதிலாக 544 தொகுதிகள் என்று இருந்தது. நமது நாட்டில் 543 லோக்சபா தொகுதிகளே இருக்கும் நிலையில், 544 என்று இருந்தது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதற்குக் காரணம் என்ன.. 543க்கு பதிலாக 544 என்று அட்டவணையில் இருக்க என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
என்ன காரணம்: லோக்சபா தேர்தலில் மணிப்பூரில் மொத்தம் இரண்டு தொகுதிகள் இருக்கும் நிலையில், அதில் ஒரு தொகுதியில் மட்டும் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாகவே தேர்தல் அட்டவணையில் 544 என உள்ளதாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் விளக்கமளித்துள்ளார்.
எந்த மாநிலங்களில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல்! எந்த மாநிலங்களில் 7 கட்டங்களிலும் தேர்தல்- லிஸ்ட் இதோ
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இரண்டு லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும். அங்கே இன்னர் மணிப்பூர் மற்றும் அவுட்டர் மணிப்பூர் என்று இரண்டு தொகுதிகள் உள்ளன. அதில் இன்னர் மணிப்பூர் மற்றும் அவுட்டர் மணிப்பூரில் சில பகுதிகளில் மட்டும் ஏப்ரல் 19இல் தேர்தல் நடக்கிறது. அவுட்டர் மணிப்பூரின் மற்ற பகுதிகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி மீண்டும் தேர்தல் நடக்கும்.
தேர்தல் அட்டவணை: இப்படி ஒரே தொகுதிக்கு இரண்டு முறை தேர்தல் நடைபெறுவதாலேயே தேர்தல் அட்டவணையில் 543 என்பதற்குப் பதிலாக 544 என்று இடம்பெற்றுள்ளது. மணிப்பூர் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே கடந்தாண்டு முதலே வன்முறையான சூழல் நிலவி வருகிறது. இரு சமூகங்களுக்கு இடையே அங்கே மோதல் தொடரும் நிலையில், அமைதியற்ற ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ஒரு தொகுதியில் இரு கட்டமாகத் தேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இன்னர் மணிப்பூர் மற்றும் அவுட்டர் மணிப்பூர் தொகுதிகள் இப்போது முறையே பாஜக மற்றும் நாகா மக்கள் முன்னணி (NPF) வசம் உள்ளன. இதில் அவுட்டர் மணிப்பூர் தொகுதி பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அங்குத் தொடரும் மோதல் காரணமாகப் பொதுமக்கள் பலரும் முகாம்களில் இருக்கும் நிலையில், முகாம்களில் வசிக்கும் மக்களும் வரும் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையர் விளக்கம்: இது குறித்து ராஜீவ் குமார் கூறுகையில், "இதற்குத் தேவையான நாங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்வோம். நாங்கள் ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளோம். ஜம்மு காஷ்மீர் குடியேறியவர்களுக்கு ஒரு திட்டம் உள்ளது போல, மணிப்பூரில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். . வாக்காளர்கள் அந்தந்த முகாம்களில் இருந்து வந்து வாக்களிக்கலாம்.
அங்குள்ள மக்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். எப்போதும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை வாக்குச்சீட்டின் மூலம் சரி செய்வோம். அங்கே அமைதியாகத் தேர்தல் நடத்தத் தேவையான நடவடிக்கை எடுப்போம்" என்றார். மணிப்பூர் மாநிலத்தில் அமைதியற்ற சூழல் நிலவும் நிலையில், அங்கே சுமார் 50,000 பேர் முகாம்களில் வசிப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications