திடீரென டெல்லி வந்த மாலத்தீவு பிரதிநிதிகள்! மோதலுக்கு நடுவே அதிகாரிகள் பரபர ஆலோசனை.. பின்னணி என்ன
டெல்லி: இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், திடீரென அந்நாட்டு உயர் அதிகாரிகள் டெல்லி வந்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே மோதல் கடந்த சில காலமாகவோ மோதல் போக்கு நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியா குறித்தும் இந்தியப் பிரதமர் மோடி குறித்தும் மாலத்தீவு அமைச்சர்கள் கூறி பரபரப்பைக் கிளப்பினர்.. அது மிகப் பெரிய சர்ச்சையான நிலையில், அந்த அமைச்சர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இது ஒரு பக்கம் இருக்க அங்குள்ள இந்திய ராணுவத்தினரை வெளியேற்றும் நடவடிக்கையில் மாலத்தீவு அரசு தீவிரமாக இருக்கிறது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக இரு நாட்டுப் பிரதிநிதிகளும் டெல்லியில் ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனை: வீரர்கள் வாபஸ் பெறுவதைப் பற்றி நேரடியாக குறிப்பிடாமல் பரஸ்பரம் செயல்படக்கூடிய தீர்வுகளில் ஒப்புக்கொண்டதாக இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது. மறுபுறம், மாலத்தீவும் இந்த ஆலோசனை தொடர்பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் வரும் மே மாதத்திற்குள் இந்தியப் படைகள் வெளியேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்களில் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பாக விவாதங்கள் தொடர்ந்தன.. இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது.. தற்போதைய வளர்ச்சி திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துவது எனப் பல விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மாலத்தீவு மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும் இந்திய விமான தளங்களைத் தொடர்ந்து இயக்குவதற்குப் பரஸ்பரம் செயல்படக்கூடிய தீர்வுகளை இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்திய வீரர்கள் அங்கிருப்பது ஏன்: மாலத்தீவு ஒரு தீவுகள் கூட்டமாகும். அங்கே ஒரு தீவில் யாருக்காவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களை மருத்துவமனை உள்ள வேறு தீவுக்கு அழைத்துச் செல்வதே சிரமம்.. எனவே, அவர்களுக்கு உதவும் வகையில் மாலத்தீவுக்கு ஹெலிகாப்டர்களை வழங்கியது. இதை ஆப்ரேட் செய்யும் ராணுவத்தினர் மற்றும் மருத்துவ ஊழியர்கள் என மொத்தம் 80 இந்தியர்கள் அங்கே உள்ளனர். அவர்களை வெளியேற வேண்டும் என்றே அதிபர் முகமது முய்ஸு வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மாலத்தீவு அறிக்கை: இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம், "மார்ச் 10ஆம் தேதிக்குள் மூன்று விமான தளங்களில் ஒன்றில் ராணுவ வீரர்களை இந்திய அரசு மாற்றும்.. இதை இரு தரப்பும் ஒப்புக் கொண்டன. மற்ற தளங்களிலும் இதே செயல்பாடுகள் இருக்கும். அவை மே 10ஆம் தேதிக்குள் இந்த செயல்பாடுகளை முடிக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வரை மாலத்தீவில் இந்தியா ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட அதிபர் ஆட்சியில் இருந்தார். அப்போது மாலத்தீவுக்கு நிறைய உதவிகளையும் முதலீடுகளையும் இந்தியா செய்திருந்தது. ஆனால், இந்த புதிய அதிபர் முகமது முய்ஸு சீன ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவராகவே அறியப்படுகிறார். தேர்தல் பிரச்சாரத்தின் போதே இந்தியாவை வெளியேற்றுவேன் என்ற முழக்கத்தோடு தான் முகமது முய்ஸு தேர்தலைச் சந்தித்தார். அதேபோல அதிபராகப் பொறுப்பேற்ற உடன் அவர் முதலில் சீனாவுக்கே சென்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications