காங்கிரஸின் 15 ஆண்டு சாதனையை முறியடிப்பாரா கெஜ்ரிவால்?27 ஆண்டுக்குப் பின் டெல்லியை கைப்பற்றுமா பாஜக?
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. டெல்லியில் காங்கிரஸ்தான் 15 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்திருக்கிறது. இந்த சாதனையை ஆம் ஆத்மி கட்சி முறியடிக்கும் வகையில் அரவிந்த் கெஜ்ரிவால் 3-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றுவாரா? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதேபோல மத்தியில் 3-வது முறையாக தொடர்ச்சியாக ஆட்சி அமைத்துள்ள பாஜகவால் 27 ஆண்டுகளுக்குப் பின்னராவது டெல்லியில் ஆட்சியை கைப்பற்ற முடியுமா? என்கிற கேள்வியும் எதிர்பார்ப்புக்குரியதாக இருக்கிறது.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி யூனியன் சட்டசபைக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது.

டெல்லி தேர்தல் களத்தில் ஆளும் ஆம் ஆத்மி, எதிர்க்கட்சியான பாஜக, காங்கிரஸ் ஆகியவை இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. டெல்லியில் பாஜக 1993-1998 காலத்தில் ஆட்சியில் இருந்தது. இதன் பின்னர் 1998, 2003, 2008 ஆகிய 3 சட்டசபை தேர்தல்களிலுமே காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. காங்கிரஸின் மூத்த தலைவரான ஷீலா தீட்சித் டெல்லி முதல்வராக 15 ஆண்டுகளாக பதவி வகித்தார்.
இதனைத் தொடர்ந்து 2013-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிக இடங்களைப் பெற்ற ஆம் ஆத்மி, காங்கிரஸுடன் ஆட்சி அமைத்தது. 48 நாட்களே ஆம் ஆத்மி அரசின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்தார். பின்னர் ஆம் ஆத்மி அரசு பதவி விலகியதால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஓராண்டு டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி நீடித்த நிலையில் 2015-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றியைப் பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது முதல் முறையாக 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்தார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
இதனையடுத்து 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றியை அறுவடை செய்து 2-வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்தது. டெல்லி ஆம் ஆத்மி அரசின் மதுபான கொள்கை விவகாரத்தில் அரவிந்த் கெஜிர்வால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்; பின்னர் ஜாமீனில் வெளிவந்த நிலையில் முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய அதிஷி முதல்வரானார். டெல்லி முதல்வராக 9 ஆண்டுகள் 266 நாட்கள் பதவி வகித்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி முதல்வர் நாற்காலியில் 15 ஆண்டுகள் 25 நாட்கள் பதவி வகித்தவர் காங்கிரஸின் ஷீலா தீட்சித்.
தற்போதைய சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியின் ஹாட்ரிக் வெற்றியை தடுக்க பாஜக படுதீவிரமாக போராடுகிறது. டெல்லியில் 15 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியோ சிங்கிள் டிஜிட் இடங்கள் கிடைத்தாலே போதும் என்ற நிலையில் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது. இந்த முறையும் பாஜகவுக்கு வாய்ப்பு தராமல் 3-வது முறையாக தொடர் வெற்றியைப் பெற்றாக வேண்டும்; பாஜகவின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு பதிலடி தந்தாக வேண்டும் என தீவிரம் காட்டுகிறது ஆம் ஆத்மி. இதனால் 3 கட்சிகளுமே டெல்லி தேர்தல் களத்தில் வாக்குறுதிகளை வாரி இறைத்திருக்கின்றன. டெல்லி வாக்காளர்களின் நம்பிக்கையை ஆம் ஆத்மி தக்க வைக்கிறதா? பாஜக வெல்கிறதா? என்பது பிப்ரவரி 8-ல் தெரிந்து விடும்.












Click it and Unblock the Notifications