ராகுல் மீது வழக்கு போடும் பிரீத்தி ஜிந்தா? ரசிகரின் கேள்விக்கு அவரே சொன்ன பதில்.. பின்னணி இதுதான்
டெல்லி: நடிகை பிரீத்தி ஜிந்தா தனது சமூக வலைதள பக்கங்களை பாஜகவுக்கு வழங்கியதால் அவருக்கு ரூ.18 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று கேரளா காங்கிரஸ் கட்சி சார்பில் பதிவிடப்பட்டது. இதற்கு பிரீத்தி ஜிந்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் தான் அந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்வீர்களா? என்ற ரசிகரின் கேள்விக்கு பிரீத்தி ஜிந்தா பதிலளித்துள்ளார்.
இந்தி, தமிழ் மற்றும் பல்வேறு மொழிப்படங்களில் நடித்து வருபவர் நடிகை பிரீத்தி ஜிந்தா. இவர் ஐபிஎல்லில் பஞ்சாப் அணியின் உரிமையாளராகவும் உள்ளார். இந்நிலையில் தான் கேரளா மாநில காங்கிரஸ் கட்சி சில நாட்களுக்கு முன்பு பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தது.

அதாவது பிரீத்தி ஜிந்தா பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அவருக்கு வங்கியில் ரூ.18 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் கேரளா மாநில அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ‛‛பிரீத்தி ஜிந்தா தனது சமூக வலைதள கணக்குகளை பாஜகவிடம் கொடுத்து ரூ.18 கோடி கடன் தள்ளுபடியை பெற்றுள்ளார். இப்போது அந்த வங்கி கடந்த மாதம் சிதைந்து விட்டது. முதலீட்டாளர்கள் தங்களின் பணத்துக்காக தெருவில் நிற்கின்றனர்'' என்று கூறப்பட்டு இருந்தது. அதாவது நியூ இந்தியா கூட்டுறவு வங்கியில் பிரீத்தி ஜிந்தா உள்பட மற்றவர்களின் ரூ.18 கோடி கடன் என்பது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டு இருந்தது.
இதற்கு பிரீத்தி ஜிந்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ‛‛இல்லை, நான் எனது சமூக வலைதள பக்கங்களை நானே தான் நிர்வகித்து வருகிறேன். பொய்யான செய்தியை பரப்பும் உங்களை பார்த்து வெட்கப்படுகிறேன். யாரும் எனக்கான கடனை தள்ளுபடி செய்யவில்லை. அரசியல் கட்சிகளும், அதன் பிரமுகர்களும் எனது பெயர், போட்டோக்களை பயன்படுத்தி தவறான செய்திகளை புரோமோட் செய்வது, கவனம் ஈர்ப்பதற்காக தவறான தகவல்களுடன் செய்திகளை பரப்புவதை நினைத்து அதிர்ச்சியடைகிறேன். வாங்கிய கடன் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் தவறான புரிதல் ஏற்படாமல் இருக்க உதவும் என்று நம்புகிறேன்'' என கூறியிருந்தார்.
இந்தபதிவை தொடர்ந்து கேரளா காங்கிரஸ் பிரீத்தி ஜிந்தாவிடம், ‛‛நாங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதனை ஏற்க தயாராக இருக்கிறோம்'' என்று கூறியது. அதுமட்டுமின்றி எதன் அடிப்படையில் அந்த பதிவு செய்யப்பட்டது என்பது பற்றியும் கேரளா மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் பிரீத்தி ஜிந்தா தனது எக்ஸ் பக்கத்தில் AskMe Session என்று தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது பிரீத்தி ஜிந்தாவிடம் ரசிகர் ஒருவர், ‛‛ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கை எப்போது தொடர்வீர்கள்?'' என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு பிரீத்தி ஜிந்தா, ‛‛யாரையும் அவதூறாக பேசுவது நியாயமில்லை என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் யாரோ ஒருவர் செய்த செயலுக்கு அவர் (ராகுல் காந்தி) பொறுப்பேற்க முடியாது. நான் பிரச்சனைகளை நேரடியாக எதிர்கொள்ள விரும்புகிறேன். அதில் நம்பிக்கையையும் வைத்துள்ளேன். மறைமுகமாக இந்த பிரச்சனையை அணுக விரும்பவில்லை.
எனக்கும், ராகுல் காந்திக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. எனவே அவரை நிம்மதியாக வாழ விடுங்கள், நானும் நிம்மதியாக வாழ்வேன்'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியினர் முன்வைத்த குற்றச்சாட்டில் ராகுல் காந்தி மீது வழக்கு எதுவும் தொடரப்போவது இல்லை என்று பிரீத்தி ஜிந்தா தெளிவுப்படுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications