விரைவில் அடுத்த அலை..தளர்வுகள் அறிவிப்பில் அதிகபட்ச கவனம் தேவை.. மத்திய அரசு திடீர் அறிவுறுத்தல் ஏன்
டெல்லி: அனைத்து மாநில அரசுகளும் கொரோனா ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்கும்போது அதிகபட்ச கவனம் தேவை என்றும் தளர்வுகளை படிப்படியாகவே அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா பரவலின் 2ஆம் அலை தற்போது தான் மெல்லக் குறையத் தொடங்கியுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்திற்கும் கீழாகக் குறைந்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியபோது பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கை விதித்தது. இப்போது வைரஸ் பாதிப்பு குறைய தொடங்கியுள்ளதால் மெல்லத் தளர்வுகளை அறிவித்து வருகின்றன.

கொரோனா 3ஆம் அலை
ஒருபுறம் மாநிலங்கள் தளர்வுகளை அறிவிக்கத் தொடங்கியிருந்தாலும், மறுபுறம் ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்கப்படி வலியுறுத்தி வருகின்றனர். மக்கள் முறையான கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றால் கொரோனா 3ஆம் அலை 6 முதல் 8 வாரங்களில் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உள் துறை
இந்த்ச சூழ்நிலையில் அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள் துறைச் செயலர் அஜய் பல்லா சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கொரோனா பரவல் சங்கிலியை உடைப்பதற்குத் தடுப்பூசிகள் மிக முக்கியமானது என்பதால் தடுப்பூசி போடும் பணிகளை மாநில அரசுகள் வேகமாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதிகபட்ச கவனம் தேவை
மேலும் அவர், "கொரோனா பாதிப்புகளும் ஆக்டிவ் கேஸ்களும் தொடர்ந்து குறைந்து வருவதால், பல மாநிலங்களும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தொடங்கியுள்ளன. இருப்பினும், சில மாநிலங்களில் முறையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் அது மீண்டும் மக்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூட வழிவகுக்கிறது. எனவே, கொரோனா ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்கும்போது அதிகபட்ச கவனம் தேவை.

தளர்வுகள் அறிவிப்பு
கள நிலவரத்தை நன்கு ஆராய்ந்து அதன் பின்பே ஊரடங்கில் தேவையான தளர்வுகளை அளிக்க வேண்டும். ஏற்கனவே, மாஸ்க்களு அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றுவது குறையத் தொடங்கியுள்ளது. இதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும். மேலும், கள நிலவரத்தை அறிந்துகொள்ள கொரோனா பரிசோதனைகளைத் தொடர்ந்து அதிகமாக நடத்த வேண்டும்.

மாவட்ட ரீதியாக
குறிப்பிட்ட ஒரு இடத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரித்தாலும் மாநில சுகாதாரத் துறை அதைத் தீவிரமாக ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது குறித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்கள்
தெலங்காவான மாநிலத்தில் அனைத்து விதமான ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் அம்மாநில அரசு நேற்று வாபஸ் பெறுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் அடுத்தகட்ட தளர்வுகள் குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications