வேலூர் ரயிலில் பாலியல் தொல்லை + கர்ப்பிணியை கீழே தள்ளிய கொடூரன்.. டிஜிபிக்கு மகளிர் ஆணையம் உத்தரவு
டெல்லி: வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தை கண்டித்த தேசிய மகளிர் ஆணையம் அதுபற்றிய விரிவான அறிக்கையை எப்ஐஆர் காப்பியுடன் 3 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிகளில் வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்த பெண்கள் பணியாற்றி வருகின்றனர். ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த பெண் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் டெய்லராக பணியாற்றி வருகிறார்.

இந்த பெண் திருமணமானவர். தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் நேற்று கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.
இந்த ரயில் வேலூர் மாவட்டம் கேவி குப்பம் அருகே சென்றது. அப்போது அந்த பெண் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது ஒருவர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் கர்ப்பிணி என்று கூட பாராமல் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு சென்றுவிட்டார்.
அதன்பிறகு அந்த நபர் காட்பாடி நிலையத்தில் இறங்கி தலைமறைவானார். இதற்கிடையே ரயிலில் இருந்து மர்மநபர் கீழே தள்ளியதில் விழுந்த கர்ப்பிணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றிய புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து ஹேமராஜ் என்பவரை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு, செல்போன் பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. இவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தான் சம்பவம் தொடர்பாக தமிழக டிஜிபியிடம் தேசிய மகளிர் ஆணையம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார். அதோடு தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கி உள்ளது. இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
சென்னை அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தேசிய மகளிர் ஆணையம் பதிவு செய்துள்ளது. பெண்களுக்கான ரயில் பெட்டியில் பயணித்தபோதும் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்புகிறது.
தேசிய மகளிர் ஆணைய தலைவர் உத்தரவின்படி இதுபற்றி தாமாக முன்வந்து விசாரணை மே்கொள்ளப்படுகிறது. இதுதொடர்பாக டிஜிபிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். பிஎன்எஸ் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விரிவான விசாரணை அறிக்கை எப்ஐஆர் காப்பியுடன் 3 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications