கோவாக்சின் சப்ளேவை திடீரென நிறுத்திய உலக சுகாதார அமைப்பு.. இது தான் காரணமாம்! முக்கிய தகவல்
டெல்லி: உலகெங்கும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கோவாக்சின் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது.
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் வைரஸ் பாதிப்பை எந்த நாட்டாலும் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. ஆல்பா, பீட்டா எனத் தொடர்ந்து கொரோனா உருமாறிக் கொண்டே இருந்ததும் இதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

கொரோனா வேக்சின்
கொரோனா வேக்சின் பணிகள் தொடங்கிய பின்னரே கொரோனா பாதிப்பு மெல்லக் குறையத் தொடங்கியது. சீனா தவிர பெரும்பாலான நாடுகளில் இப்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. பைசர், மாடர்னா, ஸ்புட்னிக் வி என பல்வேறு வேக்சின்கள் பயன்படுத்தி வேக்சின் பணிகள் நடைபெறுகிறது. இந்தியாவைப் பொருத்தவரை கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதேநேரம் உலகின் ஏழை நாடுகளில் வேக்சின் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக முன்வைக்கப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பு
இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பே கொரோனா வேக்சின்களை கொள்முதல் செய்து ஏழை நாடுகளுக்கு அளித்து வருகிறது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு கோவாக்சின் சப்ளேவை நிறுத்தி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கோவாக்சின் குறித்து சில நேர்மறையான தகவல் வெளியாகி உள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், கோவாக்சின் தடுப்பூசியைப் பெற்ற நாடுகளைத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டது, இருப்பினும் என்ன மாதிரியான நடவடிக்கைகள் என்பதை உலக சுகாதார அமைப்பு குறிப்பிடவில்லை.

கோவாக்சின்
இது குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐ.நா. முகமைகள் மூலம் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. அந்த தடுப்பூசியைப் பெற்ற நாடுகளுக்குத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி பயனுள்ளதாகவே இருப்பதாகவும், அதில் பாதுகாப்பு குறைபாடுகள் எதுவும் இல்லை என்றும் உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. அதேநேரம் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது கோவாக்சின் விநியோக சங்கிலியில் பாதிப்பை உருவாக்கலாம்.

பாரத் பயோடெக் விளக்கம்
கடந்த மார்ச் 14 முதல் 22 வரை உலக சுகாதார அமைப்பு கோவாக்சின் தடுப்பூசி ஆய்வு செய்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாரத் பயோடெக் நிறுவனம் சார்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் அறிக்கையில் "கோவாக்சின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை. கோவாக்சின் பெற்ற லட்சக் கணக்கான மக்களுக்கு அளிக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ்கள் தொடர்ந்து செல்லுபடியாகும்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications