விவசாய சங்க தலைவர் கோரிக்கையை ஏற்று.. பதக்கங்களை கங்கையில் விடும் போராட்டம் ஒத்திவைப்பு
டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்கள் பதங்களை கங்கையில் வீச ஹரித்துவார் சென்றனர். இதற்கிடையே கடைசி நேரத்தில் விவசாய சங்க தலைவர் அவர்களை தடுத்து நிறுத்தி அவகாசம் கோரினார்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருக்கும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பல வீராங்கனைகள் பாலியல் புகார்களை முன்வைத்துள்ளனர். கடந்த ஜன. மாதமே முதலில் இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், இதை விசாரிக்க விசாரிக்க மேரி கோம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

இருப்பினும், அதன் பின்னர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து இம்மாத தொடக்கத்தில் மீண்டும் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தைத் தொடங்கினர். முதலில் இது குறித்து போலீஸ் நிலையத்தில் வழக்கே பதிவு செய்யப்படவில்லை.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, அவர்கள் அளித்த அறிவுறுத்தலுக்குப் பின்னரே போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரிஜ் பூஷனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு விவசாயிகளும் ஆதரவு தெரிவித்தனர்.

சமீபத்தில் புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் போது, அங்கே சென்று போராட்டம் நடத்த முயன்றனர். இதனால் அங்குப் பரபர சூழல் உருவானது. இதையடுத்து பாதுகாப்பு கருதி இன்று டெல்லி எல்லைகள் மூடப்பட்டன. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோரை வலுக்கட்டாயமாகக் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே அடுத்தகட்ட போராட்டமாக தாங்கள் வென்ற பதங்களையே கங்கையில் வீச உள்ளதாக வீரர், வீராங்கனைகள் அறிவித்தனர். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து இந்தப் போராட்டத்தை நடத்துகின்றனர். இதற்காக அவர்கள் தங்கள் ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச தொடர்களில் வென்ற பதங்களுடன் ஹரித்துவாருக்கு வந்துள்ளனர்.

அங்கே கங்கை நதியில் பதக்கங்களை விட உள்ளனர். பதங்களை விட அவர்கள் கங்கை நதிக்கரைக்கு வந்துள்ள நிலையில், அவர்கள் கண்ணீர் விட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர்கள் பதக்கங்களைக் கங்கையில் விடச் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த விவசாயச் சங்கத் தலைவர் நரேஷ் டிக்கைட் வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வீசக் கூடாது எனக் கேட்டுக் கொண்டார். மேலும், 5 நாட்கள் தங்களுக்கு நேரம் தரும்படியும் அதற்குள் நிச்சயம் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க முடியும் எனக் கேட்டுக் கொண்டார். விவசாயச் சங்கத் தலைவர் நரேஷ் டிக்கைட், வீரர்களிடம் இருந்து பதக்கங்களையும் பெற்றுக் கொண்டார்.
நரேஷ் டிக்கைட் கேட்டுக் கொண்டதை அடுத்து மல்யுத்த வீரர் வீராங்கனைகள் தங்கள் முடிவுகளை மாற்றிக் கொண்டு ஹரித்துவாரில் இருந்து திரும்பினர்..












Click it and Unblock the Notifications