எழுத்தாளர் பாலன் புத்தேரி பத்மஶ்ரீ விருது பெற்ற நேரத்தில் கேரளாவில் தகனம் செய்யப்பட்ட மனைவியின் உடல்
டெல்லி: டெல்லியில் மாற்றுத் திறனாளி எழுத்தாளரான பாலன் புத்தேரி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் பத்மஶ்ரீ விருது பெற்ற நேரத்தில் அவருக்கு வாழ்நாள் எல்லாம் உறுதுணையாக உந்துசக்தியாக இருந்த மனைவி சாந்தாவின் உடல் தகனம் செய்யப்பட்டு எரியூடப்பட்ட நெஞ்சை பிழியும் சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லியில் வழங்கினார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் இருந்து பத்ம ஶ்ரீ விருது பெற்றவர்களில் கேரளாவின் பாலன் புத்தேரியும் ஒருவர்.

பத்மஶ்ரீ விருதுக்கு பாலன் புத்தேரி
இந்துமத சம்பிரதாயங்கள், கோவில்கள் உள்ளிட்டவை தொடர்பான 200க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். இத்தனைக்கும் கண்பார்வை தெரியாத மாற்றுத் திறனாளிதான் பாலன் புத்தேரி. கேரளா எழுத்துலகில் அறியப்படாத எழுத்தாளர் பாலன் புத்தேரி.

ஆர்.எஸ்.எஸ். தொடர்பால் சர்ச்ச்சை
இந்து மதம், கோவில்கள் தொடர்பான நூல்களை எழுதியதால் இந்துத்துவா அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். அதனடிப்படையில்தான் பாலன்புத்தேரிக்கு பத்மஶ்ரீவிருது வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இது கேரளாவில் விமர்சனங்களையும் கூட முன்வைத்தது. இந்த நிலையில் பத்ம ஶ்ரீ விருது பெறுவதற்காக பாலன்புத்தேரி தமது சகோதரருடன் டெல்லிக்கு சென்றிருந்தார்.

டெல்லியில் பாலன் புத்தேரி
பாலன் புத்தேரி டெல்லிக்கு செல்லும் போது அவரது மனைவி சாந்தா உடல்நலக் குறைவால் வாழ்வின் இறுதி தருணங்களில் இருந்தார். மாற்றுத் திறனாளியாக இருந்த போதும் தமக்கு அத்தனை அடித்தளமாக இருந்த மனைவி சாந்தாவை பத்மஶ்ரீவிருது பெறும் நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்ல ஆசைப்பட்டார் பாலன் புத்தேரி. ஆனால் புற்றுநோய் சாந்தா அம்மையாரை கவ்விப் பிடித்துக் கொண்டு மரண வாசலுக்கு இழுத்துச் சென்ற நிலையில் பாலன் புத்தேரி டெல்லியில் பத்ம ஶ்ரீ விருது பெறுவதற்காக காத்திருந்தார்.

பத்ம ஶ்ரீவிருது பெறும் நேரத்தில் சோகம்!
அந்த தருணத்தில்தான் மனைவி சாந்தா இறந்த தகவல், டெல்லியில் இருந்த பாலன் புத்தேரிக்கு தெரிவிக்கப்பட்டது. டெல்லியில் இருந்து உடனே கேரளா திரும்ப முடியாத நிலையில் தவித்துக் கொண்டிருந்தார் பாலன் புத்தேரி. மனதை கல்லாக்கிக் கொண்டு மனைவியின் உடலை தகனம் செய்ய ஒப்புக் கொண்டார் அவர்.. மிக சரியாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் இருந்து பத்ம ஶ்ரீவிருதுகளை பாலன் புத்தேரி பெற்ற நேரத்தில் கேரளாவின் கொண்டேட்டியில் அவரது மனைவி சாந்தாவின் சிதை எரியூட்டப்பட்டு கொண்டிருந்தது என்பதுதான் எத்தனை பெரிய சோகம்!












Click it and Unblock the Notifications