ஜனாதிபதி தேர்தல்! எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக களமிறங்கும் யஷ்வந்த் சின்கா! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டெல்லி: குடியரசு யஷ்வந்த் சின்கா தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவராக இப்போது ராம்நாத் கோவிந்த் உள்ளார். அவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது.
நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்ய வரும் ஜூலை 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக
இந்தத் தேர்தலில் வெல்ல பாஜகவுக்கு இன்னும் கொஞ்ச வாக்குகள் மட்டுமே தேவை என்ற நிலையே உள்ளது. ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகளிடம் ஆலோசனை நடத்த மற்ற கட்சிகளிடம் பேச ராஜ்நாத் சிங் மற்றும் ஜேபி நட்டா ஆகியோரை கொண்ட குழுவை பாஜக அமைத்துள்ளது.

எதிர்க்கட்சிகள்
பாஜகவுக்கு போட்டி அளிக்கும் வகையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து பொதுவான வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் ஆலோசனையில் இறங்கின. இதற்காக முதலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த வாரம் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் கடிதம் எழுதி இருந்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதலில் சரத் பவார் பெயர் அடிப்பட்டது.

குழப்பம்
இருப்பினும், சரத் பவார் அதை மறுத்துவிட்டார். இதையடுத்து தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லா மற்றும் மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி ஆகியோர் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இருப்பினும், அவர்கள் இருவரும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்லி குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்துவிட்டனர். இதனால் இதனால் எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்வதில் குழப்பம் நீடித்தது.

யஷ்வந்த் சின்கா
இந்தச் சூழலில் இன்று டெல்லியில் சரத்பவார் தலைமையில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரைத் தேர்வு செய்ய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மற்ற கட்சிகள்
முன்னதாக குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வசதியாக யஷ்வந்த் சின்கா திரிணாமுல் காங்கிரஸ் துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. மம்தா பானர்ஜி கடிதம் எழுதிய சமயத்தில் ஆம் ஆத்மி உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளரைப் பொறுத்து எதிர்க்கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படுமா என முடிவு செய்யப்படும் என கூறி இருந்தன. இப்போது யஷ்வந்த் சின்கா போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கட்சிகள் விரைவில் தங்கள் நிலைப்பாட்டை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications