எனக்கு ஏன் கொரோனா வரலை தெரியுமா.. ஒரு ட்வீட் போட்டு தெறிக்கவிட்ட நித்தி.. மறக்க முடியாத 2020!
டெல்லி: கொரோனா வருவதை முன்பே அறிந்து கொண்டுதான் கைலாசாவில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டேன் என கைதுக்கு பயந்து தப்பி சென்றதை நித்தியானந்தா சாமர்த்தியமாக சமாளித்ததை மறக்க முடியுமா?
பிடதி ஆசிரமத்தை பெங்களூரில் நடத்தி வருகிறார் நித்தியானந்தா. இவர் மீது பாலியல் பலாத்கார வழக்குகள் நிலுவையில் உள்ளன. பெங்களூர் பாலியல் வழக்கில் ஆஜராக நித்தியானந்தாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால் அவர் கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அங்கு கைலாசா என தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சத்சங்கம்
தினந்தோறும் தனது சிஷ்யர்களிடம் வீடியோ மூலம் சத்சங்கம் செய்து வரும் அவர் பொதுவாக கூறுவது எல்லாம் காமெடியாகவே இருக்கும். அப்படி அவர் கூறியது ஏதோ விளையாட்டுக்கு சொல்கிறார் என நினைத்தால் அவர் சீரியஸாகவே சில விஷயங்களில் இறங்கினார்.
கைலாசா
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும் தனிமைப்படுத்துதல் என்ற ஒரு நடைமுறையை உலக நாடுகள் பின்பற்றின. கொரோனாவால் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டன. அப்போதும் விடாத நித்யானந்தா, கைலாசாவில் கொரோனா பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை. நான் கைலாசாவுக்கு சென்ற போது என்னை பைத்தியகாரன் என்றார்கள்.
பெருமை
ஆனால் இன்று உலக நாடுகளே தனிமைப்படுத்துதலை அறிவுறுத்துகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது. வருங்காலத்தில் நிகழ்வதை முன்பே கணித்து என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டதால் தான் ஒரு தீர்க்கதரிசி என தன்னை பற்றி பெருமையாக கூறிக் கொண்டார்.
நாணயம்
அது மட்டுமல்லாமல் விநாயகர் சதுர்த்தி அன்று காலணா வரை 10 காசு வரை கைலாசாவின் நாணயங்களை நித்தி அறிமுகப்படுத்தினார். அத்துடன் 300 பக்கங்கள் கொண்ட பொருளாதார கொள்கைகளையும் வகுத்துள்ளார். இவற்றை தமிழில் பொற்காசுகள் என பெயரிட்டார். சமஸ்கிருதத்தில் ஸ்வர்ண முத்ரா, புஷ்ப முத்ரா என அழைத்தார். இந்து மதத்தை பின்பற்றும் 56 நாடுகளுடன் வர்த்தகம் செய்ய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.