தமிழ்நாடு இளைஞர் எழுதிய கவிதைப் புத்தகம்.. டெல்லியில் வெளியிட்ட மத்திய அமைச்சர்!
டெல்லி: தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் கவிஞரான ஜோசன் ரஞ்சித் எழுதியுள்ள "DUDE" என்ற ஆங்கில கவிதை புத்தகத்தை மத்திய அமைச்சர் பகன் சிங் குலஸ்தே வெளியிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளம் கவிஞரான ஜோசன் ரஞ்சித் "DUDE" எனும் ஆங்கில கவிதை புத்தகத்தை எழுதியுள்ளார்.

இந்த புத்தகம் மார்ச் 23ஆம் தேதி மாலை டெல்லியில் நடைபெற்ற டாப் நாச் ஃபுன்டேஷன் (Top-notch Foundation) மற்றும் OUTLOOK வார நாளிதழ் நடத்திய சர்வதேச விருது வழங்கும் விழாவில் வெளியிடப்பட்டது.
இந்தப் புத்தகத்தை மத்திய அமைச்சர் பகன் சிங் குலஸ்தே , இந்திய நடிகை ஹேமா மாலினி இருவரும் வெளியிட்டனர். இந்தப் புத்தகத்தின் முதல் பிரதியை கவிஞர் ஜோசன் ரஞ்சித்தின் பெற்றோர் ஜான் பிரிட்டோ மற்றும் ஜோனி தனசீலி பெற்றுக்கொண்டனர். இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், பத்துக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், நூற்றுக்கணக்கான சர்வதேச, இந்திய தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.
கவிஞர் ஜோசன் ரஞ்சித் இதுவரை நான்கு தமிழ் புத்தகங்கள் மற்றும் மூன்று ஆங்கில புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். இந்தப் புத்தகம் அவரது எட்டாவது படைப்பாகும். கவிஞர் ஜோசன் ரஞ்சித் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி "அன்பு உடன்பிறப்பே" என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் இருந்து நாட்டின் தலைநகரத்தில் நமது மாநிலத்திற்கு பெருமை சேர்த்த இந்த இளைஞர் மேலும் பல படைப்புகளை சமூகத்திற்காக எழுத பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் இந்த நிகழ்ச்சியில் வளரும் இளம் இந்திய எழுத்தாளர் என்ற விருதினை ஜோசன் ரஞ்சித்திற்கு உத்திரபிரதேச தொழிலாளர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் வழங்கினார்.












Click it and Unblock the Notifications