மருத்துவமனை ப்யூன் அட்டகாசம்.. 16 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் கொடுமை
டெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனையின் பியூன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல டெல்லியின் மற்றொரு பகுதியில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுமியின் தாய்மாமன் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி
பெண்களை போக பொருளாக காட்சிப்படுத்தும் சினிமாக்கள், விளம்பரங்கள், இலக்கிய படைப்புகள் ஆகியவற்றிக்கு எதிராக தொடர்ச்சியான கருத்தியல் போரை நடத்த வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது என மகளிர் அமைப்புகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தேசிய தலைநகர் டெல்லியில் அரசு மருத்துவமனையிலேயே 16 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் சம்பந்தப்பட்டுள்ள நபர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் பலாத்காரம்
இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது, "16 வயது சிறுமி ஒருவர் சிகிச்சைக்காக கிழக்கு டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். அங்கு பியூனாக பணியாற்றுவர் இவருக்கு உதவுவதாக கூறியுள்ளார். இவர் ஏற்கெனவே சிறுமிக்கு நன்கு பரிட்சியமானவர் என்பதால் சிறுமியும் அவரை நம்பியுள்ளார். இந்நிலையில் பிற்பகல் ஒரு மணியளவில் தனியாக உள்ள ஒரு அறைக்கு சிறுமியை அழைத்து சென்ற அந்த நபர் அங்கு வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ந்துபோன சிறுமி சம்பவம் குறித்து தனது உறவினர்களுக்கு தெரிவித்துள்ளார்.

கைது
இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. நாங்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்ததில் சம்பவம் உண்மையென தெரிய வந்தது. சிறுமியை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அனுமதித்து, குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்திருக்கிறோம். அவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பாக காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஐசிசி மறுபுறம் விசாரித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையிலேயே சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தாய் மாமன்
இந்த சம்பவத்தின் பரபரப்பு குறைவதற்குள் மற்றொரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது வடகிழக்கு டெல்லியின் கஜூரி காஸ் பகுதியில் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 30ம் தேதி இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு சிறுமியின் 52 வயதான தாய் மாமன் இக்கொடுமையை அரங்கேற்றியுள்ளார். சம்பவம் குறித்து பெற்றோருக்கு தெரிய வந்துள்ள நிலையில் அவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை பிரச்னைகளை குறைக்க பாலியல் கல்வியும், பாலின சமத்துவ கல்வியும் அவசியம் என்று மகளிர் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications