நீட் தேர்வு முறைகேடு! குரலெழுப்பிய ராகுல் காந்தி.. சட்டென டெல்லியில் குவிந்த இளைஞர் காங்கிரசார்!
டெல்லி: நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், முறைகேட்டிற்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீட் தேர்வு குறித்து தமிழக அரசு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், தேசிய அளவில் தற்போது நீட் தேர்வுக்கு எதிராக குரல்கள் எழுந்திருக்கின்றன. இதற்கு காரணம் சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகள்தான். அதாவது, தேர்வு எழுதியவர்களில் 1500 பேருக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளன. 67 தேர்வர்கள், 720 என்ற முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதற்கு முன்னர் யாரும் இப்படி பெற்றதில்லை. ஒரே மையத்தில் இருந்து அதிகம் பேர் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளதும் சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.

எனவே நீட் தேர்வுக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு பணம் பெற்றுக்கொண்டு நடத்தப்படுகிறது. இதில் பல முறைகேடுகள் நடக்கின்றன. சமீபத்திய தேர்வு முடிவுகள் தங்கள் மாநில மாணவர்களுக்கு அநீதியாக அமைந்துள்ளது என்று கூறி, நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மகாராஷ்ட்ரா அரசு வலியுறுத்தியுள்ளது.
விவகாரம் பெரியதாக வெடித்த நிலையில், மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி, நீட் முறைகேடு குறித்து விசாரிக்கப்படும் என்று கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,
"நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை. 6 தேர்வு மையங்களில் மட்டும் தான் பிரச்னை நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளதால் மறு தேர்வு நடத்த வேண்டியதில்லை. நீட் தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள உயர்கல்வித் துறை செயலாளர், முறைகேடு புகார்கள் குறித்து குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும்.
30 நிமிடங்கள் தேர்வு நேரம் குறைவாக இருந்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதால் மைனஸ் மதிப்பெண் பெற்றவர்களும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். இதன் மூலம் மாணவர்கள் 718, 719 மதிப்பெண்களும், 6 பேர் முழு மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கருணை மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை" என்று கூறியிருந்தார்.
ஆனால் இவரது விளக்கங்களை மாணவர்கள் ஏற்கவில்லை. எனவே போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இப்படி இருக்கையில் நீட் தேர்வு முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என காங்கிரஸின் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
"ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் நீட் தேர்வில் முழு மதிப்பெண், 67 மாணவர்கள் 720 மதிப்பெண் பெற்றது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றது. மோடி பதவியேற்பதற்கு முன்பாகவே நீட் தேர்வு முறைகேடு 24 லட்சம் மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்துவிட்டது.
மோடி அரசு பதவியேற்கும் முன்பே நீட் தேர்வில் நடந்த முறைகேடு 24 லட்சம் மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை குலையவைத்துள்ளது. ஒரே மையத்தில் தேர்வெழுதிய 6 மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண்களை பெற்றுள்ளனர். பல மாணவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆனால், வினாத்தாள் லீக் என்பதை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
வினாத்தாள் லீக் போன்ற முறைகேடுகளை தடுக்க, காங்கிரஸ் சிறந்த திட்டத்தை முன்வைத்தது. மாணவர்களுக்காக நாடாளுமன்றத்தில் நான் குரல் எழுப்புவேன் என உறுதி அளிக்கிறேன். இந்தியா கூட்டணி மீது இளைஞர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களின் குரல் நெறிபடுவதை இந்தியா கூட்டணி அனுமதிக்காது" என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து இளைஞர் காங்கிரசார் டெல்லியில் போராட்டத்தை நடத்தியுள்ளனர். போராட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications