20 லட்சம் கட்டணும்..ஆனால் சம்பளமே கிடையாது! சொமாட்டோ சிஇஓ கொடுத்த மெகா ஆஃபர்.. குவிந்த விண்ணப்பங்கள்
டெல்லி: சொமாட்டோ நிறுவனத்தின் தலைமை பணியாளர் பதவிக்கு ஆட்கள் தேவை என அறிவித்திருக்கிறார் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான தீபேந்தர் கோயல். ஆனால் தேர்வு செய்யப்படும் நபருக்கு முதல் ஆண்டு சம்பளம் கிடையாது எனவும், வேலையில் சேர்பவர்கள் 20 லட்சம் ரூபாயை முன்பணமாக செலுத்த வேண்டும் என அறிவித்திருந்தாலும், ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது.
இந்த இணைய உலகில் அனைத்துமே ஆன்லைன் மயமாகிவிட்டது. கையில் செல்போன் இருந்தால் போதும் என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாம், சாதித்து விடலாம் என்பது போல ஆகிவிட்டது.

காலையில் எழுந்தால் காபி குடிப்பது தொடங்கி இரவு உறங்கச் செல்வது வரை ஆன்லைன் மூலமாக பலரும் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தங்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை ஆன்லைனிலேயே ஆர்டர் செய்யலாம்.
தற்போது இந்தியாவில் இந்த ஆன்லைன் உணவு டெலிவரி முறை கோடிக்கணக்கான பணம் புழங்கும் வர்த்தக சந்தையாக உருமாறி வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஸ்விக்கி, சொமாட்டோ நிறுவனங்கள் இந்த துறையில் கால் பதித்து மிகப் பெரிய நிறுவனங்களாக வலம் வருகிறது. குறிப்பாக சொமாட்டோ நிறுவனம் இந்த துறையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றிருக்கிறது. தற்போது உணவு டெலிவரியில் ஸ்விக்கியை விட சொமாட்டோ முன்னணியில் இருக்கிறது.
இதன் மூலம் டீ, காபி தொடங்கி சைவ, அசைவ, உணவுகளை ஆர்டர் செய்து வீட்டிலேயே பெற்றுக் கொள்ளலாம். இதில் லட்சக்கணக்கான ஊழியர்கள் 24 மணி நேரமும் சொமாட்டோ நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனமாகவும் சொமாட்டோ திகழ்கிறது. இந்த நிலையில் சொமாட்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான தீபேந்தர் கோயல், அந்நிறுவனத்தின் தலைமை பணியாளர் பதவிக்கு ஆட்கள் தேவை என பல நிபந்தனைகளுடன் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
அதாவது சொமாட்டோ நிறுவனத்தின் தலைமை பதவிக்கு விண்ணப்பிக்கும் நபருக்கு முதல் ஆண்டு எந்தவித சம்பளமும் வழங்கப்படாது எனவும், அதே நேரத்தில் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 லட்சம் ரூபாயை முன் பணமாக செலுத்த வேண்டும் என தெரிவித்திருக்கிறார். அவ்வாறு அவர்கள் செலுத்தும் தொகை ஃப்டிங் இந்தியா நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.
அதே நேரத்தில் வேலையில் சேர்ந்த இரண்டாவது ஆண்டில் இருந்து ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் ஊதியமாக வழங்கப்படும் எனவும், மேலும் தேர்வு செய்யப்படுபவர் சொல்லும் தொண்டு நிறுவனங்களுக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அவ்வாறு பணிக்கு சேர்பவர்கள் சொமாட்டோ நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட பணிகளை ஈடுபட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்
அதே நேரத்தில் இந்த பணிக்கு பத்தாயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவித்திருந்த போதிலும், முதல் ஓராண்டு ஊதியம் இல்லாமலும், 20 லட்சம் ரூபாயை செலுத்துவதற்கும் தயாராக இருப்பதாக வெறும் 24 மணி நேரத்தில் 18 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக சொமாட்டோ கூறியுள்ளது. அதே நேரத்தில் இது வெறும் அறிவிப்பு மட்டும் இல்லை, இதற்கு பின்னால் பெரிய திட்டம் இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications