அண்ணாமலை தொழிலதிபர்களை மிரட்டி வருகிறார்.. யாரெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்? அமைச்சர் அட்டாக்!
தருமபுரி : பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அனைத்து தொழிலதிபர்களையும் மிரட்டி வருகிறார், அவர் பாணியே மிரட்டல் பாணி. அண்ணாமலையிடம் யார் யாரெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று மக்களுக்கு தெரியும் என தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திமுக அரசு மீதும், திமுக அமைச்சர்கள் மீதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் நிலையில், திமுகவினர் பலரும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அந்தவகையில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அண்ணாமலையை சீசன் அரசியல்வாதி என விமர்சித்துப் பேசியுள்ளார்.

திமுக அமைச்சர்
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள சின்னாறு உப வடிநிலப் பகுதியில் உள்ள சின்னாறு அணை கால்வாய், கேசர்குழிஅல்லா அணை கால்வாய்கள், குமாரசெட்டி ஏரி மற்றும் பதினைந்து அணைக்கட்டுகளை புனரமைக்கும் பணியினை பஞ்சப்பள்ளியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

சீசன் அரசியல்வாதி
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "மைக் கிடைக்கிறேதே என்று பேசுபவர் அண்ணாமலை. அவர் ஒரு அரசியல் வாதியே இல்லை, சீசன் அரசியல்வாதி. கர்நாடகாவில் காவல்துறையில் பணியாற்றியபோது, தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் விடக்கூடாது என பேசியவர். அண்ணாமலை தலைவருக்கே தகுதியில்லாதவர். பாஜகவில் தகுதியில்லாதவர்களை தலைவராக்கியிருக்கிறார்கள். பாஜகவிற்கு கொள்கையும் கிடையாது, ஒன்றும் கிடையாது, பேசிப் பேசியே கட்சியை வளர்த்து வருகின்றனரே தவிர வேறு ஒன்றும் கிடையாது" என விமர்சித்துள்ளார்.

அண்ணாமலை மிரட்டல்
மேலும், "அண்ணாமலை அனைத்து தொழிலதிபர்களையும் மிரட்டி வருகிறார், அவர் பாணியே மிரட்டல் பாணி. அண்ணாமலையிடம் யார் யாரெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று மக்களுக்கு தெரியும். மத்திய அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி அரசு அதிகாரிகளையும், மற்றவர்களையும் மிரட்டி வருகிறார்கள், அது தமிழகத்தில் எடுபடாது." எனத் தெரிவித்துள்ளார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

70 சதவீதம்
தொடர்ந்து பேசிய அவர், "தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் புளோரைடு இல்லாத தூய்மையான குடிநீர் பருகிட கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம். இரண்டாவது கட்ட திட்ட பணிகளுக்கான ஆய்வுகள் நடந்து வருகிறது. முடிந்த பின்னர் முதலமைச்சர் இந்தத் திட்டத்தினை தொடங்கி வைப்பார். திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் எழுபது சதவீத வாக்குறுதிகளை, திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றோம்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications