திமுக - பாமகவினர் திடீர் மோதல்.. கைகலப்பால் பரபரத்துப்போன பென்னாகரம்! என்ன நடந்தது?
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் அலங்கார வளைவை கட்டுவது யார்? என்று திமுக மற்றும் பாமகவினர் இடையே இன்று மோதல் ஏற்பட்டது. இந்த மோதலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி எம்பியாக திமுகவை சேர்ந்த மணி உள்ளார். அதேபோல் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக ஜிகே மணி உள்ளார். இவர் பாமகவை சேர்ந்தவர். பாமகவின் மாநில தலைவராக பொறுப்பு வகித்த வந்த ஜிகே மணி தற்போது கட்சியின் கவுரவ தலைவராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் பென்னாகரத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பேருந்து நிலையம் கட்டும் பணி கடந்த 2019ம் ஆண்டு தொடங்கியது. மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
தற்போது பென்னாகரம் புதிய பேருந்து நிலையத்தில் 80 சதவீதத்துக்கும் அதிகமான பணிகள் முடிவடைந்துள்ளது. தற்போது பேரூராட்சிகளின் பொது நிதியிலிருந்து கூடுதலாக ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் பென்னாகரத்தில் புதிய பேருந்து நிலையம் நிலையத்தின் நுழைவு வாயில் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெறுவதாக இருந்தது.
இந்த பூமி பூஜைக்கான ஏற்பாடுகளை திமுகவினர் மேற்கொண்டு வந்தனர். தர்மபுரி திமுக எம்பி மணி தலைமையில் இந்த பூமி பூஜை மேற்கொள்ளப்பட இருந்தது. தர்மபுரி எம்பியின் தொகுதியின மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.39 லட்சம் செலவில் நுழைவுவாயில் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதுபற்றி தகவலறிந்தவுடன் பாமகவினர் அங்கு குவிந்தனர். பேருந்து நிலைய நுழைவு வாயிலில் அலங்கார வளைவு அமைப்பதற்கான பூமி பூஜைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது பென்னகாரம் பாமக எம்எல்ஏ ஜிகே மணி நுழைவு வாயில் அமைக்க முடிவு செய்துள்ளார். நுழைவு வாயில் மற்றும் பயணிகள் நிழற்குடை கட்ட தனது எம்எல்ஏ நிதியில் இருந்து ரூ.39 லட்சம் ஒதுக்கி பென்னாகரம் பேரூராட்சியில் ஏற்கனவே அனுமதி கோரியுள்ளார். அப்படி இருக்கும்போது திமுகவினர் அரசியல் லாபத்துக்காக இந்த பணியை மேற்கொள்வதாக கூறி வாக்குவாதம் செய்தனர்.
இந்த வாக்குவாதம் முற்றியது. இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏறபட்டது. மேலும் கைகலப்பும் உருவானது. இதையடுத்து அங்கிருந்த போலீசார் உடனடியாக தலையிட்டு இருதரப்பையும் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்ததால் தொடர்ந்து பதற்றம் நிலவியது. பாமகவினர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து ஒருவழியாக போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பூமி பூஜை பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் பென்னாகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications