‛எங்க அம்மா தான் நிக்கிறாங்க.. ஒரு வாய்ப்பு கொடுங்க ப்ளீஸ்’’.. தாய் சௌமியாவுக்காக களமிறங்கிய மகள்கள்
தருமபுரி: தருமபுரி லோக்சபா தொகுதியில் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி, பாஜக கூட்டணி வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு ஆதரவாக அவரது மகள் வாக்கு சேகரித்துள்ளது பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எனவே அரசியல் கட்சிகள் தீவிரமான பிரசாரத்தை மேற்கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் இந்த முறை திமுக vs அதிமுக vs நாதக vs பாஜக என நான்கு முனை போட்டி நிலவுகிறது. இதில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் களம் காண்கிறது.

திண்டுக்கல் - ம.திலகபாமா
அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு
ஆரணி - அ.கணேஷ் குமார்
கடலூர் - தங்கர் பச்சான்
மயிலாடுதுறை - ம.க.ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி - இரா.தேவதாஸ் உடையார்,
தருமபுரி - சௌமியா அன்புமணி,
சேலம் - ந.அண்ணாதுரை
விழுப்புரம் - முரளி சங்கர்
காஞ்சிபுரம் (தனி) - வெ.ஜோதி வெங்கடேசன்
ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் தருமபுரி வேட்பாளர் சௌமியா அன்புமணியின் தேர்தல் பரப்புரை பெரும் கவனம் ஈர்த்திருக்கிறது. அன்புமணி ராமதாஸின் மனைவி என்பதால் இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அதேபோல இவர் ஏற்கெனவே அன்புமணி ராமதாசுக்காக பிரசாரம் செய்திருக்கிறார். எனவே, தேர்தல் களத்தை எதிர்கொள்வதில் இவருக்கு எந்த சிக்கலும் இல்லை.
இந்நிலையில் பிரசாரத்தில் இவரது மகள்கள் இவருக்காக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியிருக்கின்றனர். தருமபுரி நகர் பகுதியில் வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்த அவர்கள், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி தருமபுரியின் தண்ணீர் தேவையை எனது அம்மா தீர்த்து வைப்பார் என்று கூறி வாக்கு செகரித்து வருகின்றனர். அதேபோல டாஸ்மாக் ஒழிப்பு குறித்தும் வாக்குறுதி அளித்து தனது தாய் சௌமியா அன்புமணிக்காக மகள்கள் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், “எனது அம்மா இந்த தொகுதிக்கு எவ்வளவு நல்லது நினைக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். அந்த பயன் இந்த மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றுதான் அவருக்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறோம். அவர் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் தொகுதி முழுவதும் இருக்கும் தண்ணீர் பிரச்னையை சரி செய்ய போராடுவார். அக்கா, தங்கை என நாங்கள் மூன்று பேரும் இந்த தொகுதியில் இருந்து, தொகுதியின் பிரச்னையை என் அம்மாவிடம் கொண்டு சேர்ப்போம்.
வெற்றி பெற்ற பின்னர் நாங்கள் இங்கு வரமாட்டோம் என்று நினைக்க வேண்டாம். இது எங்கள் ஊர், நீங்கள் எங்கள் மக்கள், நாம் எல்லோரும் ஒன்றுடன் ஒன்றாக இருந்து நாம்தான் நம்மை முன்னேற்றிக்கொள்ள வேண்டும்” என்று கூறி வாக்கு சேகரித்துள்ளனர்.
சௌமியா அன்புமணிக்காக அவரது மகள்கள் பிரசாரத்தில் இறங்கியிருப்பது தமிழக அரசியலில் கவனம் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications