அரசு ஊழியர்களே ஓய்வு பெற்ற உடன் பென்சன் பணம் வாங்க போறீங்களா.. தர்மபுரியில் 'பாடம்' புகட்டிய ஆசிரியை
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்த கவிதா என்பவர் சிக்கார்த்தனஅள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர் மருத்துவ குழு பரிந்துரைப்படி விருப்ப ஓய்வு பெற்றார். தொடர்ந்து தனக்கு கிடைக்க வேண்டிய வருங்கால வைப்புநிதி மற்றும் பணிக்கொடை ரூ.29 லட்சத்து 22 ஆயிரத்து 384-ஐ பெறுவதற்கு விண்ணப்பித்தார். அதை வழங்க 10 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம் கருவூல அதிகாரி.. அவர் கையும் களவுமாக சிக்கி கைதாகி உள்ளார்.
அரசு ஊழியர்கள் யாராவது தங்கள் கடமையை செய்வதற்கு லஞ்சம் கேட்டால் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். புகாரின் உண்மை தன்மையை உறுதி செய்த ஆடியோ அல்லது வீடியோ ஆதாரங்கள் இருந்தால் அல்லது சாட்சிகள் இருந்தால், அதை வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனடியாக மேல் நடவடிக்கை எடுப்பார்கள். அவர்களை கையும் களவுமாக பிடிக்க நடவடிக்கை எடுப்பார்கள். அப்படி ஒரு நடவடிக்கையில் தான் தர்மபுரியில் கருவூல அதிகாரி கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்த 50 வயதாகும் கவிதா ஆசிரியை ஆவார். இவர் சிக்கார்த்தனஅள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக தொடர்ந்து பணியை மேற்கொள்வதில் ஆசிரியை கவிதாவுக்கு சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து . மருத்துவ குழு பரிந்துரைப்படி கவிதா விருப்ப ஓய்வு பெற்றார்.
தொடர்ந்து தனக்கு சேரவேண்டிய வருங்கால வைப்புநிதி மற்றும் பணிக்கொடை ரூ.29 லட்சத்து 22 ஆயிரத்து 384-ஐ பெறுவதற்கு தர்புமரி மாவட்ட கருவூலத்துறையில் விண்ணப்பித்தார். இந்த தொகையை வழங்குவதற்கு முதன்மை அக்கவுண்ட் ஜெனரல் அலுவலகம் உத்தரவிட்டது. ஆனால் பாலக்கோடு சார்நிலை கருவூலத்தில் பண பலன்கள் பெறுவதற்கு அனுமதி அளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கவிதாவின் மகன் அவினாஷ், அங்கு கூடுதல் சார்நிலை கருவூல அலுவலராக பணிபுரியும் ராமச்சந்திரன் (42) என்பவரை சந்தித்து பணப் பலன்கள் கிடைக்க உரிய அனுமதி வழங்குமாறு வேண்டுகோள் வைத்தாராம். அப்போது ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் அனுமதி அளிப்பதாக அவர் கூறினாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த அவினாஷ் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை.
இது குறித்து அவர் தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார், அவினாஷிடம் கொடுத்தனர். நேற்று அந்த அலுவலகத்திற்கு சென்ற அவினாஷ் கூடுதல் சார்நிலை கருவூல அலுவலர் ராமச்சந்திரனிடம் அந்த ரூ.10 ஆயிரத்தை கொடுத்திருக்கிறார்.
அப்போது அப்பகுதியில் மறைந்திருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட தர்மபுரி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜ், இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் லஞ்சம் பெற்ற ராமச்சந்திரனை கையும், களவுமாக பிடித்தனர். இதைத்தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். லஞ்சம் பெற்ற வழக்கில் பாலக்கோடு கூடுதல் சார்நிலை கருவூல அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications