அம்மான்னு கூட நினைக்கல.. காட்டுக்குள் கடத்தி.. சேலையை உருவி.. வாயில் மதுவை ஊற்றி.. அதிரும் தருமபுரி
தருமபுரி: தருமபுரியில் நடந்த கொடூர சம்பவத்தின் அதிர்வலைகள் இன்னமும் அடங்கவில்லை.. யாரிந்த காதல் ஜோடி? தற்போது எங்கே மாயமாகி இருக்கிறது இந்த ஜோடி? போலீஸார் விசாரணையை விரிவுபடுத்தி வருகிறார்கள்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கீழ்மொரப்பூர் பகுதியை சேர்ந்த செல்வன் என்பவரது மகன் சுரேந்தர்.. 24 வயதாகிறது.. கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

பவித்ரா: இவர் பவித்ரா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.. கீழ்மொரப்பூர் அருகே உள்ள கணபதிபட்டி கிராமத்தைச் சேர்ந்த பூபதி என்பவரது மகள் இந்த பவித்ரா. 23 வயதாகிறது.. நன்றாக படித்தவர்.. பள்ளியில் ஒன்றாக படிக்கும்போதிருந்தே, சுரேந்தரும், பவித்ராவும் காதலித்து வந்துள்ளனர். ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்..
இந்நிலையில், நேற்றுமுன்தினம் சாயங்காலம், வீட்டை விட்டு சென்ற பவித்ரா, அன்றைய இரவெல்லாம் வீட்டிற்கு வரவில்லை.. மறுநாள் காலையிலும் பவித்ரா வீடு திரும்பவில்லை.. அப்போதுதான் சுரேந்தரும், மாயமானது பவித்ரா குடும்பத்தினருக்கு தெரியவந்தது.
கடும் ஆத்திரம்: சுரேந்தர்தான், தன்னுடைய மகளை அழைத்து சென்றிருப்பார் என்று பவித்ராவின் அப்பா கடும் ஆத்திரமடைந்தார். இதனால், கும்பலை திரட்டிக் கொண்டு சுரேந்தர் வீட்டுக்கு சென்ற பவித்ராவின் அப்பா, பவித்ரா எங்கே? என்று கேட்டு சுரேந்தரின் அப்பா செல்வம், அம்மா முருகம்மாளிடம் தகராறு செய்திருக்கிறார்.
வாய்த்தகராறு முற்றிய நிலையில், செல்வத்தின் சட்டையை கிழித்து அந்த கும்பல் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
கணவரை தாக்குவதை பார்த்து அலறி துடித்த முருகம்மாள், அதை தடுக்க ஓடிவந்தார். ஆனால், கணவன் கண்முன்னேயே முருகம்மாளின் புடவையை இழுத்து, துன்புறுத்தியதாம் அந்த கும்பல்.. இந்த கொடுமையை பார்த்த செல்வத்தின் அண்ணன் மகன் அர்ஜூன் சுப்பிரமணி, ஓடி வந்து தடுத்தபோது, அவரையும் அடித்து தாக்கினார்களாம்.
தகாத வார்த்தைகள்: அதுமட்டுமல்ல, முருகம்மாளை, அந்த கும்பல் காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று, சுரேந்தர் இருக்கும் இடத்தை கேட்டு அடித்து உதைத்துள்ளனர.. வயதான பெண் என்றும்பாராமல், அவரை அரை நிர்வாணப்படுத்தி, தகாத வார்த்தைகளால் பேசி, பெட்ரோல் ஊற்றிக் கொலை செய்துவிடுவதாக கத்தியை காட்டி மிரட்டியிருக்கிறார்கள். இந்த கொடூரத்தின் உச்சக்கட்டமாக முருகம்மாவின் வாயில் மதுவை ஊற்றி, குடிக்கச்சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளனர்.
என் மகன் எங்கே என்று தெரியாது? என்னை விட்டு விடுங்கள் என்று முருகம்மாள் அந்த கும்பலிடம் கெஞ்சியும்கூட விடாமல் தொடர்ந்து அவரை துன்புறுத்தியிருக்கிறார்கள்.
மொரப்பூர் சாலை: இதனிடையே, முருகம்மாள் கடத்தி செல்லப்பட்ட தகவல் சென்றதையடுத்து, போலீசார் காட்டுக்கு விரைந்தனர்.. ஆனால், அதற்குள் காட்டுக்குள்ளிருந்த அந்த கும்பல், முருகம்மாளை அழைத்து வந்து, மொரப்பூர் சாலையில் விட்டுள்ளனர். "நடந்த சம்பவத்தை போலீசில் சொன்னால், உன் வீட்டிலுள்ள அனைவரையும் கொன்றுவிடுவோம்.. உன் மகன் எங்கே இருந்தாலும், எத்தனை வருஷம் ஆனாலும், அந்தப் பெண்ணையும் உன் மகனையும் கொன்றுவிடுவோம்" என்று மிரட்டிவிட்டு சென்றிருக்கிறார்கள்.
மொரப்பூர் சாலைக்கு சென்ற போலீசார், முருகம்மாளை அங்கிருந்து அழைத்துச் சென்று, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போலீசார் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் தர்மபுரியில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
கோச்சிங் கிளாஸ்: பட்டப்படிப்பை முடித்த பவித்ரா, அரசு வேலைக்கான கோச்சிங் கிளாஸ் சென்று வருகிறார். தங்கள் காதலுக்கு, வீட்டில் கடுமையான எதிர்ப்பு வந்ததால், காதலர்கள் 2 பேருமே பயந்துவிட்டார்கள்.. பெற்றோர்கள் தங்களை பிரித்து விடுவார்கள் என்று பயந்துபோன காதல் ஜோடி, 2 நாட்களுக்கு முன்பாக வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டதாக தெரிகிறது. இந்த விஷயம் சுரேந்தரின் பெற்றோருக்குகூட தெரியாது.
ஆனாலும், "சுரேந்தர் எங்கே? காதல் ஜோடி மறைந்து இருக்கும் இடம் எங்கே? எங்க பெண்ணை, நீதான் அனுப்பி வைத்தாயா? பவித்ரா கிடைக்கும்வரை, நீ எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும்" என்று சொல்லியே, முருகம்மாளை காட்டுக்குள் கடத்தி சென்றிருக்கிறார்கள். வாயில் மதுவை ஊற்றியும், சேலையை உருவியும் அவமானப்படுத்தியும், கடுமையாக தாக்கியும் இருக்கிறார்கள்.
அதிரடி கைது: இந்நிலையில், முருகம்மாளை சித்ரவதை செய்த, பூபதி, கார்த்திக், பூபதி மனைவி செல்வி, சரவணன், மாயன், வேலு, கலையரசன் உள்ளிட்ட 20 பேர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.. ஆனால், அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்..!!!












Click it and Unblock the Notifications