நீட் தேர்வு ஆள்மாறாட்டம்.. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் இர்பான் தலைமறைவு
Recommended Video
தருமபுரி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் இர்பான் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சென்னை மாணவர் உதித் சூர்யா தேனி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாமாண்டு சேர்ந்த விவகாரத்தில் போலீஸார் அவரையும் அவரது தந்தையையும் கைது செய்தனர்.

அவர்கள் இருவரும் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து மருத்துவ கல்வி இயக்ககம் தமிழகத்தில் உள்ள மருத்துவ மாணவர்களின் சேர்க்கை குறித்து விசாரித்தது.
அப்போது 4 பேர் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது. ஒரு மாணவர் பெயர் பிரவீன் என்றும் அவர் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. மற்றொருவர் ராகுல், இவர் பாலாஜி மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார்.
மற்றொரு மாணவியின் பெயர் அபிராமி. இவர் சென்னையை அடுத்த திருப்போரூரில் சத்ய சாய் மருத்துவக் கல்லூரி மாணவராவார். இவர்கள் மூவரும் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. அது போல் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த இர்பான் என்ற மாணவரும் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது.
இந்த நிலையில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட அபிராமி சிபிசிஐடி போலீஸில் ஆஜராகியுள்ளார். ஆனால் இர்பான் கைதுக்கு பயந்து கொண்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார் என கூறப்படுகிறது. இவர் ஏற்கெனவே மொரிஷியஸில் மருத்துவம் படித்து வந்ததும் பின்னர் தருமபுரி மாவட்ட அரசு கல்லூரியில் சேர்ந்ததும் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications