பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. தர்மபுரி தவெக முக்கிய நிர்வாகி போக்சோவில் கைது.. என்ன நடந்தது?
தர்மபுரி: தர்மபுரியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகி போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். தவெகவில் கடத்தூர் நகர பொறுப்பாளராக செயல்பட்டு வரும் சுதாகர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாவட்ட ரீதியிலான பதவிகள் நிரப்பப்பட்டு வருகிறது. ஜனவரி மாத இறுதியிலேயே 5 கட்டங்களாக 95 மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தவெக சார்பாக பல்வேறு புதிய அணிகள் உருவாக்கப்பட்டு, அதற்கான நியமனங்கள் நடந்து வருகின்றன.

இதனிடையே தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழா கூட்டத்தில் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக விஜய் பேசுவார் என்று பார்க்கப்பட்டது. ஆனால் சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விஜய் எந்த விமர்சனத்தையும் முன் வைக்கவில்லை.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்திற்கு பின் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியையும், விமர்சனத்தையும் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்காமல் இருக்க போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பான புகாரில் தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக கடத்தூர் நகர பொறுப்பாளராக செயல்பட்டு வருபவர் சுதாகர். 45 வயதான இவர், நேற்று இரவு அரூர் மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சுதாகர் உறவினரின் மகள் அங்குள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்த பெண் பிப்.23ஆம் தேதி நள்ளிரவு 2 மணியளவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்திருக்கிறார். அப்போது மாணவிக்கு சுதாகர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கூச்சலிட்ட அந்த மாணவியால், சுதாகர் உடனடியாக அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதன்பின் சிறுமியின் தரப்பில் அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுதாகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன்பின் சுதாகர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை போக்சோவில் கைது செய்தனர். இதன்பின் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications