ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக
தர்மபுரி: பலக்கோடு தொகுதி திமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செந்தில்குமார், ரூ.8000 கூப்பன் கொடுத்து வாக்கு கேட்டிருந்தார். இது தேர்தல் விதி மீறல் என்றும், செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அதிமுகவினர் வலியுறுத்தியுள்ளனர்.
ரூ.8000 கூப்பன் என்பது, வாக்காளர்களை ஏமாற்றும் செயல் என்றும், இதற்காக வேட்பாளர் மீதும் கட்சியின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுகவினர் வலியுறுத்தியுள்ளனர்.

ரூ.8000 கூப்பன்
இந்த தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் மிக முக்கியமானதுதான் இந்த ரூ.8000 கூப்பன். ஏற்கெனவே மகளிர் உரிமைத் தொகை பெறும் குடும்ப தலைவிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த கூப்பனை வைத்து, தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும். இந்த அறிவிப்பு குடும்ப தலைவிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த திட்டம் மூலம் பெண்களின் பொருளாதார சுதந்திரம் சாத்தியமாகும் என்று சொல்லப்படுகிறது.
அதிமுக எதிர்ப்பு
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரங்களில் இந்த டோக்கனை கொடுத்து வாக்கு கேட்கப்படுகிறது என்றும், இது அப்பட்டமான விதிமீறல் என்றும் அதிமுகவினர் புகார் எழுப்பியிருக்கின்றனர். குறிப்பாக பாலக்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செந்தில் மீது, இதற்காக நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.

ஆனால், இங்குதான் ட்விஸ்ட். அதாவது இந்த கூப்பனை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்த திமுக, தேர்தல் ஆணையத்திடமிருந்து அனுமதி வாங்கியிருக்கிறது. இதற்கான ஆவணங்களும் சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
முன் அனுமதி
கடந்த ஏப். 1ம் தேதி இதற்காக அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் 'ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்' என்கிற வாக்கியங்களை கொண்ட ரூ.8000 கூப்பன் போன்ற இரண்டு போஸ்டர்களை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இந்த போஸ்டர்களைதான் டோக்கன் மாதிரி கொடுத்து வாக்கு கேட்கப்பட்டிருக்கிறது. எனவே இது தேர்தல் விதிமீறல் கணக்கில் வராது என்று திமுகவினர் கூறுகின்றனர்.
அதிமுக வேட்பாளர்
இது தவறு எனில், காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் சோம சுந்தரம், பிரிட்ஜ், சிலிண்டரை கிஃப்ட் போல பேக் செய்து வந்து வாக்கு கேட்டிருக்கிறார். அவரும் தேர்தல் விதிகளை மீறியிருக்கிறார் என்று அர்த்தமா? என திமுகவினர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications