அன்புமணியை சமாளிக்க திமுக மேலிடத்தின் புது வியூகம்! பாப்பிரெட்டிபட்டி பழனியப்பனுக்கு ஜாக்பாட்?
தருமபுரி: தருமபுரியை குறிவைத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தீவிரமாக களப்பணியை தொடங்கியுள்ளதால் திமுக தரப்பிலும் அவரை எதிர்கொள்வதற்கான வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.
பாமகவின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தருமபுரி மாவட்டத்திற்கு புதிய மாவட்டச் செயலாளரை கொண்டு வர திட்டமிட்டுள்ளது திமுக தலைமை.
ஜெயலலிதா அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராகவும், ஐவர் குழுவில் இடம்பெற்றவருமான பாப்பிரெட்டிபட்டி பழனியப்பனுக்கு தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பதவி கிடைத்தால் அதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.
முதல்வர் ஸ்டாலின் அவர்களே.. காப்பாற்ற வேண்டும்! முக்கிய கோரிக்கை விடுக்கும் அன்புமணி! என்ன காரணம்?
தருமபுரி மாவட்டம்
பாட்டாளி மக்கள் கட்சிக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ள மாவட்டங்களில் தருமபுரி மாவட்டமும் ஒன்று. கிளை முதல் மாவட்டம் வரை தருமபுரியில் பாமக வலிமையாக இருக்கும் நிலையில் அதனை எதிர்கொள்வதற்காக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை அந்த மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அவரும் கடலூர்-தருமபுரி-சென்னை என மாறி மாறி பம்பரமாக சுழன்று வருகிறார்.
அன்புமணி ராமதாஸ்
இந்நிலையில் அண்மையில் தருமபுரி மாவட்டத்தில் அன்புமணி ராமதாஸ் நடத்திய மூன்று நாள் நடைபயணம் குறித்த ரிப்போர்ட் ஆட்சி மேலிடத்திற்கு சென்றிருக்கிறது. அதில் அன்புமணிக்கு கிடைத்த வரவேற்பும் எழுச்சியும் திமுக தலைமையை மாற்றி யோசிக்க வைத்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் கூட முழுமையாக இல்லாத நிலையில் தருமபுரி மாவட்டத்தில் சில அதிரடி மாற்றங்களை அரங்கேற்றுவற்கான பணிகளை தொடங்கிவிட்டதாம் திமுக தலைமை.
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
அந்த வகையில் தற்போதைய தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணிக்கு பதில் மாஜி அமைச்சர் பாப்பிரெட்டிபட்டி பழனியப்பனை அந்த இடத்திற்கு கொண்டு வரும் யோசனையில் இருக்கிறதாம் திமுக தலைமை. மாவட்ட பொறுப்பு அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மட்டும் இதற்கு கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டால் செப்டம்பர் 16ஆம் தேதிக்கு பிறகு நடக்கும் மாவட்டச் செயலாளர் தேர்தல் மூலம் பழனியப்பனுக்கு ஜாக்பாட் அடிக்கலாம் எனக் கூறுகிறார்கள் தருமபுரி மாவட்ட உடன்பிறப்புகள்.
பழனியப்பன்
ஜெயலலிதா அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராகவும், ஜெயலலிதாவால் கட்சிப் பிரச்சனைகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐவர் குழுவில் ஒருவராகவும் இருந்தவர் பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு அமமுகவுக்கு சென்று ஓராண்டுக்கு முன்னர் திமுகவில் இணைந்தது கவனிக்கத்தக்கது.