10% இடஒதுக்கீட்டை வாபஸ் பெறுக... இல்லாவிட்டால் போராட்டம்.. கி.வீரமணி திடீர் போர்க்கொடி
தருமபுரி: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்சாதியினருக்கான, 10 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும், என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு தற்போது இருந்து வருகிறது.

இந்நிலையில், பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருந்தால் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனைத்தொடர்ந்து, மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு சில கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தநிலையில், தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான, இடஒதுக்கீட்டை மத்திய அரசு தேர்தல் கண்ணோட்டத்தில் தான் அறிவித்ததாக விமர்சித்தார்.
மேலும், இடஒதுகீட்டை தமிழக அரசு வாபஸ் பெறாவிட்டால், ஒருமித்த கருத்துடைய இயக்கங்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும், எனவும் கி.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆண்டுக்கு 8 லட்ச ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ளவர்கள், 5 ஏக்கருக்கு கீழ் விவசாய நிலம் உள்ளவர்கள், 1000 சதுர அடிக்கு குறைவாக சொந்த வீடு உள்ளவர்கள், அறிவிக்கப்பட்ட நகராட்சிகளில் 100 சதுர அடிக்கு குறைவான வீட்டடி மனை கொண்டவர்கள், அறிவிக்கப்படாத நகராட்சிகளில் 200 சதுர அடிக்கு குறைவான வீட்டடி மனை கொண்டவர்கள் இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை பெற தகுதி பெற்றவர்கள் என்று கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications