நிரம்பிய கர்நாடக அணைகள்! தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு பொங்கி வந்த காவிரி! ஒகேனக்கல்லில் வெள்ளம்
தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரிக்கு வினாடிக்கு 61 ஆயிரம் கனஅடி நீரானது வந்து கொண்டிருப்பதால் அங்கு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தென் மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் காவிரியிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இதனால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து நேற்று முன் தினம் 75 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகா- தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.
கடந்த இரு தினங்களாக வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரித்தது. இந்த நிலையில் கபினி, கேஆர்எஸ் ஆகிய அணைகளில் இருந்து 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் வந்து கொண்டிருந்தது. கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் இன்றைய நிலவரப்படி 61 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகள் மூழ்கும் நிலையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. காவிரி ஆற்றங்கரையின் இருபுறமும் தொட்டப்படி தண்ணீர் சீறிபாய்கிறது. மெயின் அருவிக்கு செல்லும் வழியாக நடைபாதைக்கும் தண்ணீர் வந்துவிட்டது. நாளுக்கு நாள் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகமாக இருப்பதன் காரணமாக கடந்த 15 ஆம் தேதி மாலை முதல் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்குவதற்கும் அருவிகள் மற்றும் காவிரி ஆற்றில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் தண்ணீர் அதிகரிப்பதால் சுற்றுலா பயணிகள் உள்ளே செல்லாதவாறு பூட்டி சீல் வைத்து மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பரிசலில் செல்ல முடியாமல் மெயின் அருவிகளிலும் குளிக்க முடியாத சூழல் நிலவுகிறது.
கர்நாடகா அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றிற்கு வரும் நீர் வரத்து 1 லட்சம் கன அடி அளவு வரை வரக் கூடும் என்பதால் தமிழக- கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர் வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அது போல் கேரளாவிலும் கனமழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் ரெட் அலர்ட் அளிக்கும் அளவுக்கு மழை கொட்டி வருகிறது.
தமிழகத்தின் கோவையிலும் நான்ஸ்டாப்பாக மழை பெய்து வருவதாக சொல்லப்படுகிறது. அது போல் மலை பிரதேசங்கள், நீர் நிலைகளுக்கு செல்லும் போது பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கபினியில் 62.76 அடி நீர் மட்டம் உள்ளது. இதன் முழு கொள்ளளவு 65 அடியாகும். அது போல் கிருஷ்ணராஜ சாகர் அணையின் முழு கொள்ளளவு 124.8 அடியாக உள்ள நிலையில் தற்போது நீரின் அளவு 113.4 அடியாக உள்ளது.












Click it and Unblock the Notifications